இதை மட்டும் செஞ்சு பாருங்க.. சட்டசபை எப்படி ஜாம் ஜாமென்று நடக்குதுன்னு!
சட்டசபை, நாடாளுமன்ற சபாநாயகர்கள் எந்தக் கட்சியையும் சாராதவராக இருந்தால் கூட்டம் அமைதியாக ஆக்கப்பூர்வமாக நடக்கும் என்ற கருத்து வலுத்துள்ளது.
சென்னை: நாடாளுமன்றமானாலும் சரி, சட்டசபையானாலும் சரி சபாநாயகர் என்பவர் கட்சி சாராதவராக இருந்தால் பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு விடை காணப்படும் என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது.
ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள்தான் சபாநாயகராக இருக்க வேண்டும் என்பது தொன்று தொட்டு வரும் பழக்கமாக உள்ளது. மைக்குகளை உடைப்பதும், செருப்புகளை வீசுவதும், கூச்சல், குழப்பங்கள் அதிகரிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
மக்களின் நலன்களுக்காக இவ்வாறு நடைபெறுகிறது என்றாலும் கூட இத்தகைய கூச்சல் குழப்பங்களால் அரசியல் லாபம் தேடவே எதிர்க்கட்சிகள் முயல்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.
கூச்சல் , குழப்பத்துக்கு காரணம் என்ன?
லோக்சபாவோ ராஜ்யசபாவோ, மாநில சட்டசபையோ எதுவாக இருந்தாலும் ஆளும் கட்சியை சேர்ந்தவரே சபாநாயகராக இருப்பதால் தாங்கள் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்பதே எதிர்க்கட்சிகளின் பிரதான குற்றச்சாட்டு. இது நியாயமான குற்றச்சாட்டுதான்.
எப்படி இருக்க வேண்டும்?
சபாநாயகர் என்பவர் நடுநிலை நாயகராக இருக்க வேண்டும். கட்சி பேதமின்றி அனைவருக்கும் பேச வாய்ப்பளிப்பவராக இருக்க வேண்டும். பேசுவது அவரவர் அடிப்படை உரிமை. அதை சபாநாயகர் தடுக்கக் கூடாது என்பது பொதுவான கோரிக்கையாக உள்ளது. அதிலும் ஆளும் கட்சியின் முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்பும்போதும், மக்கள் விரோத திட்டங்கள் குறித்து பேச முற்பட்டாலும் எதிர்க்கட்சிகள் தடுக்கப்படுவதாக புகார்கள் எழுகின்றன.
கட்சி சாராதவர்
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரலும் ஒலிக்க வேண்டும் என்றால் சபாநாயகர் என்பவர் கட்சி சாராதவராக இருக்க வேண்டும். அப்போதுதான் அவைகளில் கூச்சல், குழப்பங்கள் நடைபெறாது. இதற்கு சபாநாயகர் என்பவர் எக்கட்சியையும் சாராதவராக இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது என்ற கருத்து எழுந்துள்ளது.
மூன்றாவது இடம் பிடித்த கட்சிக்கு
பொதுத் தேர்தல், லோக்சபா தேர்தல், ராஜ்யசபா தேர்தல் என எதுவாக இருந்தாலும் முதலிடம் பிடிப்பவர்கள் ஆளும் கட்சி, இரண்டாவது இடம் பிடிப்பவர்கள் எதிர்க்கட்சி. இவர்களைத் தவிர்த்து விட்டு வேறு ஒரு கட்சியைச் சேர்ந்தவரை சபாநாயகராக்கலாம் என்பது ஒரு ஐடியா. அவர் நடுநிலையாக செயல்பட வாய்ப்பு உள்ளது.
சிறிய கட்சிகளின் பிரதிநிதி
எந்த தேர்தலாக இருந்தாலும் சிறிய கட்சிகளில் இருந்து ஏதேனும் ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். அந்த உறுப்பினரை சபாநாயகர் பதவிக்கு அமர்த்தலாம். அவர் ஆளுங்கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சிக்கு கூட்டணியாக இல்லாதவராக இருக்க வேண்டும்.
நீதிபதியை கூட...
எந்த கட்சியையும் சாராத ஓய்வு பெற்ற நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், திறமையான மக்கள் சேவகர்கள் என அவைக்கு சம்பந்தமில்லாதவர்களையும் சபநாயகர் பதவிக்கு தேர்ந்தெடுக்கலாம். இதற்காக சில சிறப்பு சட்டத் திருத்தங்களையும் கொண்டு வரலாம். இவ்வாறு செய்தால் அவைகளில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற வாய்ப்பு கிடைக்கும்
சாத்தியமா ?
இது நடைமுறை சாத்தியமா என்றால் இப்போதைய நிலையில் நிச்சயம் இல்லை. ஆனால், கடவுள் வேண்டாம்னு சொல்லை. ஆனா அவர் இருந்தா நல்லாயிருக்கும் என்றுதான் சொல்கிறேன் என கமல் சொல்வாரே.. அதேபோன்ற யோசனைதான் இதுவும்.
ஆட்சியில் மட்டுமல்ல மாற்றம்.. எல்லாவற்றிலும் அது வந்தால்தானே "சிஸ்டம்" சரியாக இருக்க முடியும்!