மோடியை விமர்சனம் செய்த அம்பேத்கர்- பெரியார் மாணவர் அமைப்புக்கு ஐஐடி மெட்ராஸ் தடை!
சென்னை: பிரதமர் மோடி மற்றும் இந்துத்துவாவை பற்றி விமர்சனம் செய்து ஐஐடி வளாகத்திற்குள் மாணவர் குழு நடத்தியவர்களை, மெட்ராஸ் ஐஐடி எச்சரித்ததுடன், அந்த குழுவுக்கு தடை விதித்துள்ளது.
மெட்ராஸ் ஐஐடியில், அம்பேத்கர்-பெரியார் படிப்பு மையம் என்ற பெயரில், மாணவர்கள் சிலர் இணைந்து குழு அமைத்து செயல்பட்டு வந்தனர். அவர்கள் ஐஐடி வளாகத்திற்குள்ளேயே, மத்திய அரசு, பிரதமர் மோடி, இந்துக்களுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் அச்சடித்து வினியோகிப்பது, பிரசாரம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து மத்திய மனிதவள அமைச்சகத்துக்கு, கடிதங்கள் மூலமாக சிலர் புகார்கள் அனுப்பியுள்ளனர். இதையடுத்து ஐஐடிக்கு விளக்கம் கேட்டு மத்திய மனித வளத்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து, மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக கூறி ஐஐடி அந்த அமைப்புக்கு தடை விதித்துள்ளது. நோட்டீஸ் போர்டிலும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின், உறுப்பினரான மாணவர் அபினவ் கூறுகையில், "மத்திய அரசையும், அதன் கொள்கைகளையும் விமர்சனம் செய்ய அரசியல் சாசனத்தில் அதிகாரம் தரப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்தை ஐஐடி பறிப்பதை ஏற்க முடியாது" என்றார்.
இதனிடையே, ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் பெயரை வேறு நோக்கிற்காக பயன்படுத்த கூடாது என்பது விதிமுறை என்றும், இந்த விதிமுறையை மாணவர்கள் மீறிவிட்டனர் என்றும் ஐஐடி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், மாணவர்கள் தற்போது விடுமுறையில் இருப்பதால், அவர்களிடம் விளக்கம் கேட்க நேரம் கிடைக்கவில்லை என்றும் ஐஐடி கூறியுள்ளது.
இதனிடையே, சுப்ரீம்கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு, ஐஐடி நடவடிக்கை பற்றி அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார். இந்திய அரசியல் சாசனம் பிரிவு 19 (a) படி அளிக்கப்பட்ட பேச்சுக்கான சுதந்திரத்தை ஐஐடி மெட்ராஸ் மீறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.