திருநாவுக்கரசர் பாஜகவில் இருந்திருந்தால் பிரதமர் ஆகி இருப்பாரா? இளங்கோவன் சாடல்
ஈரோடு: காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நான் அதிகவில் இப்போது இருந்திருந்தால் முதல்வர் ஆகி இருப்பேன் என்கிறார். அப்படியானால் பா.ஜ.க.வுடன் இருந்திருந்தால் பிரதமர் ஆகி இருப்பாரா? என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரி 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திங்கள்கிழமை போராட்டம் நடத்தும் போக்குவரத்து ஊழியர்களை சந்தித்து பேசினார். அதன்பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், இங்கு போராட்டம் நடத்தும் ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது. இதனை தமிழக அரசு உடனே ஏற்க வேண்டும், வறட்சியின் பிடியில் சிக்கி விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள். ஏற்கனவே ஒரு போக்குவரத்து ஊழியர் தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார். ஆகவே போக்குவரத்து ஊழியர்களுக்கும் அந்த நிலை வந்து விடக்கூடாது. முதல் அமைச்சர் தலையிட்டு சுமூக முடிவு எடுக்க வேண்டும். ஊழியர்களுக்கு பணி எண் உடனடியாக வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுததி வருகிறார்கள். ஆனால் ஒரு அமைச்சர் அது தேவையில்லை என்று கூறி உள்ளார். அவர் பேச்சு எந்த வகையில் நியாயம்? அவர் பேச்சு பொருப்பற்ற பேச்சாக உள்ளது.
காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நான் அ.தி.மு.க.வில் இப்போது இருந்திருந்தால் முதல்வர் ஆகி இருப்பேன் என்கிறார். இது அவரது தனிப்பட்ட கருத்து. அப்படியானால் பாரதிய ஜனதாவுடன் இருந்திருந்தால் திருநாவுக்கரசர் பிரதமர் ஆகி இருப்பாரா?.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.