பெண் போலீஸோடு கள்ளக் காதல்… கணவரை மீட்டுத்தர மனைவி புகார்.. நெல்லையில் பரபரப்பு
பெண் போலீஸோடு கள்ளக் காதல் கொண்டு ஓடிப் போன கணவரை மீட்டுத் தர மனைவி கோரியுள்ளார்.
திருநெல்வேலி: பெண் போலீஸ் ஒருவருடன் தொடர்பு வைத்துக் கொண்ட கணவரை மீட்டுத் தரக் கோரி பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இட்டமொழியை சேர்ந்தவர் முத்துச்செல்வி. இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்ட நல்லூரை சேர்ந்த கதிரவன் என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கதிரவன் திருச்செந்தூர் கோவில் அருகே உள்ள தனியார் விடுதியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அப்போது விடுதியில் தங்க வந்த மணிமுத்தாறு பட்டாலியனை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவருக்கும், கதிரவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் அவர்களிடையே காதலாக மாறியது.
இது பற்றி அறிந்த முத்துச்செல்வி கணவனை கண்டித்தார். இதில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கதிரவன் தனது மனைவியை அவரது தாய் வீட்டிற்கு விரட்டி விட்டாராம்.
இந்நிலையில் முத்துச் செல்வி, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், எனது கணவர் கதிரவனுக்கும் , பெண் போலீசுக்கும் கள்ளத்தொடர்பு உள்ளது. இதை தட்டி கேட்ட என்னை கதிரவன் மற்றும் அவரது உறவினர்கள் வீட்டை விட்டு விரட்டி விட்டனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.