புளியரையில் கள்ள துப்பாக்கி தொழிற்சாலை?... 4 பேர் கைதால் பரபரப்பு
நெல்லை மாவட்டம், புளியரையில் கள்ள துப்பாக்கி தொழிற்சாலை இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நெல்லை: நெல்லை அருகே கள்ள துப்பாக்கியுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், புளியரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் துப்பாக்கிகளுடன் கும்பல் நடமாட்டம் இருப்பதாக எஸ்பி அருண் சக்தி குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் போலீஸார் ரோந்து பணி செய்து வந்தனர்.
இந்நிலையில் அச்சன்புதூர்- காசிதர்மம் செல்லும் சாலையில் அச்சன்புதூர் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகமாக வேகமாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை நடத்தினர்.
காரில் உரிமம் பெற்ற துப்பாக்கி மற்றும் 6 கள்ளத் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. காரில் இருந்தவர்கள் மாயமான்குறிச்சியைச் சேர்ந்த ஆழ்வார் மற்றும் காசிதர்மத்தைச் சேர்ந்த காளிமுத்து, மேலகரத்தைச் சேர்ந்த ருமாரசாமி, வடகரை பீர்முகமது என்பதும் வனப்பகுதியில் மான் வேட்டைக்கு சென்று விட்டு திரும்பியதும் தெரிய வந்தது.
ஆலங்குளம் அருகேயுள்ள மாயமான்குறிச்சியை சேர்ந்த ஆழ்வார் புளியரை பகுதியில் கொள்ளுபட்டறை நடத்தி வந்துள்ளார். கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை தயாரித்த இவர் இப்பகுதியைச் சேர்ந்த பலருக்கு கள்ள துப்பாக்கியை தயார் செய்து விற்று ரூ.20 ஆயிரம் வரை லாபம் பார்த்துள்ளார்.
இவரும், தென்காசி நடுபேட்டையைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவரும் தொடர்ந்து விலங்குகளை வேட்டையாடி தோலை விற்றும் வந்துள்ளனர். இதுவரை 100-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை ஆழ்வார் தயார் செய்து விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. அவர் யாரிடம் துப்பாக்கி விற்பனை செய்தார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.