ஆடிகார் ஐஸ்வர்யா, அருண் விஜய் வரிசையில் சென்னைவாசிகளை பதம்பார்க்கும் கார் ரேஸ்
சென்னைவாசிகளுக்கு வார இறுதி நாட்களை பீதிக்குரியதாக்கி வருகின்றனர் ரேஸ் பந்தயகாரர்கள். பிரபலங்கள் வீட்டு பிள்ளைகள் என்பதால் சட்டத்தின் பிடியில் இருந்து எளிதிலும் இவர்கள் தப்பிக்கின்றனர்.
சென்னை: சென்னையில் குடிபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்துவது, கார் ரேஸ் நடத்தி சென்னை மக்களை குலைநடுங்க வைப்பது என்பது தொடர் கதையாகி வருகிறது.
வார இறுதி நாட்கள் என்றாலே சென்னைவாசிகளுக்கு பீதியாகிவிடுகிறது. சென்னை மெரினா கடற்கரை சாலையில் இருசக்கர வாகன ரேஸ், தாம்பரம் சாலையில் ஆட்டோ ரேஸ், கிழக்கு கடற்கரை சாலையில் கார் ரேஸ் என அதகளமாகத்தான் இருக்கிறது.
இந்த அக்கப்போர்களுக்கு மத்தியில் விடிய விடிய குடித்துவிட்டு போதையில் அதிவேகமாக கார் ஓட்டும் பிரபலங்கள், தொழிலதிபர்களின் பிள்ளைகள்... இவர்களின் கண்மூடித்தனமான இந்த கேளிக்கைகளுக்கு அப்பாவிகள்தான் பலியாகிறார்கள் என்பது பெரும் கொடுமை.
ஆடி கார் ஐஸ்வர்யா
கடந்த ஆண்டு சென்னையில் குடிபோதையில் ஆடி கார் ஓட்டி முனுசாமி என்ற அப்பாவியின் உயிரை பறித்தவர் தொழிலதிபரின் மகஸ் ஐஸ்வர்யா. பழைய மகாபலிபுரம் சாலையில் அதிகாலையில் குடிபோதையில் இந்த படுபாதகத்தை செய்தார் ஆடிகார் ஐஸ்வர்யா. நீண்ட இழுபறிக்குப் பின்னரே அவருக்கு ஜாமீன் கிடைத்தது.
அருண் விஜய்
ஆடிகார் ஐஸ்வர்யா பஞ்சாயத்து மறைவதற்குள் நடிகர் அருண்விஜய் குடிபோதையில் காரை ஓட்டி போலீஸ் வாகனம் மீது மோதினார். நடிகை ராதிகாவின் மகளின் திருமண வரவேற்பில் பங்கேற்று விடிய விடிய மூக்கு முட்ட குடித்துவிட்டு அதே போதையில் காரை ஓட்டினார் அருண்விஜய்.
தப்பி ஓட்டம்
போலீசார் அவரை பிடித்து உள்ளே வைக்க திடீரென தப்பி தலைமறைவிகிவிட்டார். பின்னர் போலீசாரின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து அருண்விஜய் சரணடைய நேரிட்டது.
ஆட்டோ தொழிலாளி பலி
சென்னையில்கடந்த செப்டம்பர் மாதம் குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது மோதினார் ஒரு மாணவர். இதில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பலியானார். பலர் படுகாயமடைந்தனர்.
திருநாவுக்கரசர் மகன்
அண்மையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மகனும் இதேபோல் நண்பர்களுடன் குடிபோதையில் காரை ஓட்டி போலீசுடன் மல்லுக்கட்டினார். குடிபோதையில் போலீசாரை ஏக வசனங்களில் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையானது.
ஈசிஆர் ரேஸ்
இந்த நிலையில் சென்னை கிழக்கு கடற்கரையில் பிரபலங்களின் வாரிசுகள் நேற்று சொகுசு கார்களை கொண்டு ரேஸ் நடத்தியுள்ளனர். இதில் போலீஸ்காரர் ஒருவர் சிக்கி படுகாயமடைந்தார். 10 சொகுசு கார்களை பறிமுதல் செய்து பிரபலங்களின் பிள்ளைகள் என்பதால் சொந்த ஜாமீனில் உடனே விடுவித்துவிட்டது போலீஸ்.
கடும் தண்டனை அவசியம்
இப்படியான கார் ரேஸ், குடிபோதையில் கார் ஓட்டுவது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும். அப்படி கிடைக்காத வரை சென்னைவாசிகளுக்கு வார இறுதி என்பதே சாபமாகவே தொடரும்.