தமிழகம் புதுச்சேரியில் டிசம்பர் 2 வரை மழை வெளுக்குமாம்... எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. வரும் புதன்கிழமை வரை தமிழகம், புதுவையில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 9ம் தேதி முதல் கனமழை கொட்டி வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் வெள்ளக்காடக மாறியுள்ளது. சராசரிக்கும் கூடுதலாகவே மழை பெய்துள்ளதால் ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பி வழிகின்றன.
இந்த நிலையில் வடகிழக்குப் பருவமழை டிசம்பர் 10ம் தேதிவரை தமிழகத்தில் நீடிக்கும் என்று அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை மையம்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய அதிகாரி ஸ்டெல்லா, நேற்று தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்ககடலில் நிலை கொண்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.
சென்னையில் மேகமூட்டம்
அடுத்த 48 மணி நேரத்தை பொருத்தவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என ஸ்டெல்லா தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 2 வரை மழை
அதேநேரத்தில் இந்திய வானிலை ஆய்வுமையம் டிசம்பர் 2ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. நவம்பர் 29, 30ம் தேதியும் 1ம் தேதி 8.30 மணி வரை கடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கன முதல் மிக கன மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கனமழை கொட்டும்
டிசம்பர் 2ம் தேதி புதன்கிழமையன்று தமிழகம், புதுவையிலும், அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
டிசம்பர் 10 வரை மழை
அதே நேரத்தில் தமிழத்தில் வடகிழக்குப் பருவமழை டிசம்பர் 10ம் தேதிவரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குடையோட போங்க
வெயிலடிக்குதேன்னு குடையில்லாம வெளியில போகாதீங்க. எதுக்கு வம்பு மழை வருதோ இல்லையோ சீசன் முடியற வரைக்கும் குடையோடவோ ரெயின் கோட் போட்டுக்கிட்டோ வெளியில போனா பாதுகாப்புதான்.