"இமானுவேல் சேகரன்" ஆகிறார் ரஜினிகாந்த்?... பா. ரஞ்சித்தின் அதிரடித் திட்டம்!
சென்னை: கபாலி திரைப்படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த புரட்சி இயக்குநர் பா. ரஞ்சித், சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தை வலிமையான 'கலகக் குரல்' பாத்திரத்தில் நடிக்க வைத்து 'தெறி'க்கவிட்டிருந்தார்.
தற்போது பா. ரஞ்சித்தின் படத்தில் மீண்டும் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருப்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் தனது மருமகன் தயாரிப்பில் முதல் முறையாக நடிக்கவுள்ளார் ரஜினி. கபாலி படத்தில் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான புரட்சிக் கருத்துகளை ரஜினிகாந்த் மூலம் பேச வைத்து மாத கணக்கில் விவாதங்களை நடத்த வைத்திருந்தார் ரஞ்சித்.
என்னதான் கபாலி திரைப்படம் மலேசியா தமிழர்களை மையமாக வைத்திருந்தாலும் தமிழகத்தில் நீடித்து வரும் ஜாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அத்தனை விடுதலை குரல்களும் அதில் இடம்பெற்றிருந்தது. ரஜினியின் கதாபாத்திரம் மலேசியா தமிழர்களின் 'டான்' கதையாக இருந்தாலும் புரட்சியாளர் இமானுவேல் சேகரனை மனதில் வைத்துதான் பல இடங்களில் செதுக்கியிருந்தார் பா. ரஞ்சித்.
குறிப்பாக,
உனக்கு நான் முன்னுக்கு வர்றதுதான் பிரச்சனைனா நான் முன்னுக்கு வருவேண்டா ,
கோட் சூட் போடுவேன்டா
கால் மேல கால் போட்டு உட்காருவேண்டா
இந்த வசனம் இமானுவேல் சேகரனை மையப்படுத்தியதாகவே இருக்கிறது.
தமிழகத்தில் முதுகுளத்தூர் உட்பட தென் தமிழகத்தில் ஜாதிய வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு படுகொலைகள் அரங்கேறிக் கொண்டிருந்தது 1957களில்.... அப்போது மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு சமாதானக் கூட்டம் நடைபெறுகிறது.
அந்தக் கூட்டத்தில் இமானுவேல் சேகரன், ஆதிக்க ஜாதி என்போருக்கு சரி சமமாக நாற்காலியில் அமர்ந்து கால்மேல் கால்போட்டு தமது தரப்பு கருத்துகளை முன்வைக்கிறார். ஆதிக்க ஜாதிவெறி தலைவர்கள் கொந்தளித்துப் போகின்றனர்...
இந்த சமாதானக் கூட்டத்துக்கு வந்து சென்ற மறுநாள் இமானுவேல் சேகரன் படுகொலை செய்யப்படுகிறார். கால்மேல் கால்போட்டு தங்களால் ஒடுக்கப்பட்ட சமூகத் தலைவர் உட்காருவதா? என்ற ஜாதி வெறியே இப்படுகொலைக்குக் காரணம்... இதை உணர்த்தும் வகையில்தான் கபாலியில் பா. ரஞ்சித் வசனத்தை வைத்திருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டாருக்காக தம்முடைய கதையில், கருத்தில், ஒடுக்குமுறைக்கு எதிரான புரட்சிக் குரலில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாதவர் ரஞ்சித். என்னதான் தாம் உச்சநட்சத்திரமாக இருந்தாலும் இயக்குநரின் நடிகராக ரஜினிகாந்தும் முழு ஒத்துழைப்பு கொடுத்ததால் பிரமாண்ட வெற்றியையும் மட்டுமல்ல.. ரஜினிகாந்த் எனும் மகா கலைஞனின் 'நடிப்பின்' உச்சத்தை வெளிப்படுத்தியது கபாலி.
கபாலியில் மறைபொருளாக இமானுவேல்சேகரனை சுட்டிக் காட்டிய பா. ரஞ்சித், புதிய படத்தில் ரஜினிகாந்தை இமானுவேல் சேகரனாக்கிலும் ஆச்சரியப்படுவதற்கில்லை... இதற்கான எதிர்வினைகள் என்னவென்பதை ரஞ்சித்தும் ரஜினிகாந்தும் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை.
ஆனால் பா. ரஞ்சித் வேற மாதிரியான இயக்குநராக இருப்பதால் தைரியமும் அவருக்கு சற்று அதிகமாகவே இருக்கிறது. எனவே செய்தாலும் செய்வார் என்பதை மறுப்பதற்கில்லை.