மதுவிலக்கை அமல்படுத்தாவிட்டால் உடலை பெறமாட்டோம்: சசிபெருமாள் உறவினர்கள் உறுதி
நாகர்கோவில்: டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராடி உயிரிழந்த சசிபெருமாளின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். என்ன கோரிக்கைக்காக போராடி உயிர் நீத்தாரோ, அதில் 30 சதவீதத்தையாவது நிறைவேற்றுவதற்கு அரசு முன்வராவிட்டால், சசிபெருமாளின் உடலை பெற்றுச்செல்ல முடியாது என்று கூறியுள்ளனர்.
பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சசிபெருமாளின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட ஆட்சியர், கன்னியாகுமரி மாவட்டத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதனை ஏற்க அவர்கள் மறுத்து விட்டனர்.
மதுவிலக்கு பற்றி அரசு அறிவிக்காவிட்டால் சசிபெருமாளின் உடலை வாங்காமலேயே சொந்த ஊர் திரும்புவோம் என்று உறுதியாக கூறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உறவினர்கள் மறுப்பு
சசிபெருமாள் மரணச் செய்தி கேட்ட உடன் நாகர்கோவிலுக்கு வந்த அவரது உறவினர்கள் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சசிபெருமாளின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். இதனையடுத்து அவர்கள், தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தும் வரை பிரேதப்பரிசோதனை செய்யக்கூடாது என்றும், மதுவிலக்கு பற்றிய அறிவிப்பை வெளியிடாவிட்டால் உடலை பெற்றுக்கொள்ளமாட்டோம் என்று தெரிவித்தனர்.
மதுவிலக்கு கோரிக்கை
தமிழகத்தில் உள்ள தேவாலயங்கள், பள்ளிகள், வழிபாட்டு தலங்கள், பெண்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மதுக்கடைகளையாவது உடனடியாக மூட வேண்டும் என சில கோரிக்கைகளையும் வைத்துள்ளனர். அவ்வாறு தமிழக அரசு ஒரு வாக்குறுதி அளித்தால் தான் உடலை பெற்றுக் கொள்வோம் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
வட்டாச்சியர் பேச்சுவார்த்தை
இந்த நிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்ற பின்னர் சசிபெருமாளின் உடலைப் பெற்றுக்கொள்ளுமாறு அகஸ்தீவரம் வட்டாச்சியர் வாசுகி சசிபெருமாள் உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது மதுவிலக்கு பற்றிய அறிவிப்பு வெளியானால்தான் உடலை வாங்குவோம் என்று அவர்கள் நிபந்தனை விதிக்கவே, இது கோரிக்கை குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றும் வட்டாட்சியர் வாசுகி உறுதி அளித்தார்.
பிரேத பரிசோதனை
இந்த நிலையில் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சசிபெருமாளின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெற்றது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் மதுவிலக்கு பற்றி அரசு அறிவிப்பு வரும் வரை உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று உறவினர்கள் உறுதியாக தெரிவித்தனர்.
சாலைமறியல்
இதனிடையே ஆசாரிப்பள்ளம் அரசுமருத்துவமனை முன்பு பல்வேறு அரசியல்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில்சசிபெருமாளின் உறவினர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர். அப்போது அவர்கள், அரசு வழங்கும், நிவாரணம், அரசு வேலை வாய்ப்பு தேவையில்லை என்று தெரிவித்தனர். கோவில்கள், பள்ளிக்கூடங்கள் அருகில் உள்ள டாஸ்மாக்கடைகளை மூடுவதாக அரசு அறிவித்தால் மட்டுமே உடலை பெற்றுக்கொள்வோம் என்று கூறினர்.
ஆட்சியர் பேச்சுவார்த்தை
இதனிடையே சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் குமரி மாவட்ட ஆட்சியர் சஜன் சிங் சவான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர்கள், மதுவிலக்கு பற்றிய அறிவிப்பு வரும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று வலியுறுத்தினர்.
ஆட்சியர் உறுதி
மாவட்ட ஆட்சியர், கன்னியாகுமரி மாவட்டத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆனால், தமிழகம் முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் அரசு அறிவித்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என சசிபெருமாளின் உறுவினர்கள் கூறினர்.
உடலை வாங்கவே மாட்டோம்
அரசு அறிவிப்பு வரும் வரை உடலை பெறுவதில்லை என்று உறுதியாக இருப்பதாக கூறிய சசிபெருமாளின் அண்ணன், சொந்த ஊர் திரும்பப் போவதாக கூறியுள்ளார். வேறுயாராவது எங்களின் உறவினர் என்று கூறி சசிபெருமாளின் உடலை பெற்று இறுதிச்சடங்கு செய்தால் அவர்கள் மீது வழக்குத் தொடருவோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்த பின்னரும் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்திவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.