'மாறுவேடத்தில்' சிறையில் சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள்.. பின்னணி என்ன?
பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்திக்க சென்ற தமிழக அமைச்சர்கள், கைதிகளை சந்திப்பதற்கான பதிவேட்டில் தாங்கள் யார் என்பதை காட்டிக் கொள்ளாததன் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்திப்பதற்காக சென்ற தமிழக அமைச்சர்கள் 4 பேரும் தங்களை அமைச்சர்கள் என்று அடையாளம் காட்டிக் கொள்ளாமல் சென்றனர்.
ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி மறைந்ததைத் தொடர்ந்து அந்த மாத இறுதியில் கட்சியின் பொதுச் செயலாளராக அவரது தோழி சசிகலாவை கட்சி நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்தனர்.
கட்சியை கைப்பற்றியது அல்லாமல் ஆட்சியையும் கைப்பற்ற வேண்டும் என்பதால் முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்யவைத்தார் சசி.
தேர்தல் ஆணையத்திடம் புகார்
இதுதொடர்பான உண்மைகளை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதியின் முன்பு பன்னீர் செல்வம் போட்டு உடைத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஓ.பன்னீ்ர் செல்வத்தை அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து நீக்குவதாக சசிகலா அறிவித்தார். மேலும் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இணைந்த அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோரின் பதவிகளும் பறிக்கப்பட்டன.
தற்காலிக பொதுச் செயலாளர்
இந்நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தற்காலிகமாகவே தேர்வு செய்யப்பட்டார். எனவே அப்பதவியானது கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்தே தேர்வு செய்ய வேண்டும் என்பதால் சசிகலாவின் நியமனம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி மைத்ரேயன் எம்.பி. தலைமையில் பன்னீர் அணியினர் தலைமை தேர்தல் ஆணையர் நஜீமை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
கெடு முடிகிறது
இதற்கு பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் அளித்த கெடு செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது. இதுகுறித்து ஆலோசனை நடத்த செங்கோட்டையன், திண்டுக்கல் சீனுவாசன், காமராஜ் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க சென்றனர்.
கர்நாடக பதிவெண் வாகனம்
சசிகலாவை சந்திப்பதற்காக தமிழக அரசின் வாகனத்தில் பெங்களூர் சென்ற அமைச்சர்கள், அங்கிருந்த கர்நாடக பதிவெண் கொண்ட வாகனத்தின் மூலம் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றனர். இதனால் கர்நாடக மாநில காவல்துறை சார்பில் புரோட்டோக்கால் பாதுகாப்பு எதுவும் கொடுக்கவில்லை. பின்னர் கைதிகளை சந்திப்பதற்கான விண்ணப்பத்தில் தங்களை அமைச்சர்கள் என்று காட்டிக் கொள்ளவில்லை.
பின்னணி என்ன?
இந்த சந்திப்பானது தற்போது பரப்பரபை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் ஏன் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளவில்லை என்பதற்கான காரணம் தற்போது புலப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸ் தொடர்பாக ஆலோசனை நடத்த பெங்களூர் சிறைக்கு கடந்த 21-ஆம் தேதி சென்ற அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜு ஆகியோரும், முன்னாள் அமைச்சர்களும் சசிகலாவை சந்திக்க சென்றனர்.
அனுமதி மறுப்பு
மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்கள், சிறையில் உள்ள குற்றவாளியை சந்தித்து பேசுவது முறையல்ல என்று கூறிய சிறைத் துறை அதிகாரிகள் அவர்களைத் திருப்பி அனுப்பினர். இந்நிலையில் தேர்தல் ஆணையம் வழங்கிய கெடு நேற்றுடன் முடிவடைந்ததால் சசிகலாவை சந்திக்க அமைச்சர்கள் படாதபாடுபட்டனர்.
சந்தித்தது எப்படி?
தமிழக காவல்துறை உயரதிகாரிகள் சிலர், கர்நாடக மாநில மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் பேசி நேற்று நடந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாக தெரியவருகிறது. மேலும் சிறையில் உள்ள தண்டனை பெற்ற கைதிகளை திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளின் மட்டுமே சந்தித்து பேசும் விதிமுறை உள்ள நிலையில் அதை மீறி செவ்வாய்க்கிழமையான நேற்று சிறைக் கைதியை தமிழக அமைச்சர்கள் சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.