கொதிப்பில் கதிராமங்கலம்.. சென்னை மெரீனாவில் திடீர் போலீஸ் குவிப்பு!
கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறாமல் தடுக்க சென்னை மெரினாவில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கும்பகோணம்: சென்னை மெரினாவில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறாமல் தடுக்க அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடபட்டுள்ளனர்.
கதிராமங்கலத்தில் 12 இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக எண்ணெய் கொண்டு செல்லப்படும் குழாய்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த இரண்டு மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கதிராமங்கலம் பகுதியில் குழாய்களில் நேற்று எண்ணெய் கசிவு ஏற்பட்டது.
கதிராமங்கலத்தில் போராட்டம்
இதனை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்யக்கோரி கிராம மக்கள் நேற்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் மட்டுமே ஆய்வு செய்ய வந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் மீது தடியடி
வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளாக மாறியதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி பொதுமக்களை கலைத்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
பொதுமக்கள் கைது
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து அங்கு இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மெரினாவில் போலீஸ் குவிப்பு
இந்நிலையில் கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தப்படும் என தகவல் பரவியது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
200க்கும் மேற்பட்டட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டத்தை போன்று கதிராமங்கலம் மக்களுக்காக போராட்டம் நடைபெற்றுவிடக் கூடாது என முன்னெச்சரிக்கைக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.