அரையடி சந்தில் மாட்டிக்கொண்ட சிறுவன்... துளையிட்டுக் காப்பற்றிய தீயணைப்புத் துறை: வீடியோ
கரூரில் இரண்டு வீடுகளுக்கு இடையே இருந்த அரையடி சந்துக்குள் சிறுவன் சந்தோஷ் மாட்டிக்கொண்டார். அவரை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
கரூர்: கரூர் எம்ஜிஆர் நகரில் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் அரையடி சந்தில் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடி வந்தான். தீயணைப்பு படையினர் சிறுவனை உயிருடன் மீட்டனர்.
கரூர் எம்ஜிஆர் நகரில் குடியிருக்கும் கந்தன் என்பவர் வீட்டுக்கு அவரது உறவினர் பையன் சந்தோஷ் கோடை விடுமுறை கழிக்க வந்துள்ளான். அப்போது அவன் அங்கிருந்த சிறுவர்களுடன் சேர்ந்து ஓடிப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது கூட விளையாடிய நண்பர்களுக்குத் தெரியாமல் மறைகிறேன் என இரண்டு வீடுகளுக்கும் இடையே இருந்த அரையடி சந்தில் நுழைந்து ஒளிந்துள்ளான்.
ஆனால் அவனால் வெளியே வரமுடியவில்லை. உடனே பயத்தில் அலறி அழுதுள்ளான். அவனுடைய அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சிறுவனை மீட்க முனைந்துள்ளனர். ஆனால் அவர்களால் முடியவில்லை என்பதால் தீயணைப்புத் துறைக்குத் தெரிவித்துள்ளார்கள்.
விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், ஒரு வீட்டின் சுவற்றில் பெரிய துளையிட்டு அதன் மூலம் சிறுவனை மீட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக இருந்தது.