அது நான்தான்... ஆனா குரலை டப்பிங் செய்திருக்காங்க- எம்.எல்.ஏ சரவணன் அடடே விளக்கம்: வீடியோ
வீடியோவில் இருப்பது நான் தான். ஆனால் அந்தக்குரல் என்னுடையது அல்ல என கூவத்தூர் வீடியோ புகழ் எம்.எல்.ஏ சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: வீடியோவில் பேசப்பட்டிருக்கும் குரல் என்னுடஒயது அல்ல. அது டப்பிங் செய்யப்பட்டுள்ளது. வீடியோவை ரிலீஸ் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன் என ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ சரவணன் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் நேற்று மாலையில் இருந்து மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலாவையும் எடப்பாடியையும் ஆதரிப்பதற்கு 6 கோடி பணமும் தங்கமும் கொடுக்க பேரம் பேசப்பட்டது என ஒரு வீடியோ டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் எம்.எல்.ஏ சரவணன் பேசுவது போல் வெளியிடப்பட்டிருந்தது.
அந்த வீடியோ வெளியிடப்பட்டவுடன், தமிழக ஊடகங்களில் அதுவே சிறப்பு விவாதக் கருப் பொருளாக மாறியது. இணையம் முழுக்க சிறப்பு ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அதற்கு எம்.எல்.ஏ சரவணன் மறுப்புத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரவணன் அந்த வீடியோவில் உள்ளது நான்தான். ஆனால், அந்த குரல் என்னுடையது அல்ல. டப்பிங் செய்யப்பட்ட குரல் போலத் தெரிகிறது. நான் எப்போதோ கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியின் வீடியோ அது என கூறினார்.
மேலும், கூட்டணி கட்சி தலைவர்கள் தமீமுன் அன்சாரி, தனியரசு மற்றும் கருணாஸ் குறித்து நான் எதுவும் கூறவில்லை. இந்த வீடியோவை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி வழக்குத் தொடுப்பேன் என கூறினார். அப்போது அவருடன் ஒபிஎஸ் ஆதரவு மூத்த நிர்வாகிகள் இருந்தனர்.