விஜயபாஸ்கரிடம் 5 மணிநேரம் துருவித்துருவி விசாரித்த வருமான வரித்துறை
சென்னை: சென்னையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வருமானவரித்துறை 5 மணிநேரமாக விசாரணை நடத்தினர். வருமானவரித்துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழக துணைவேந்தர் கீதாலட்சுமி, மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இதில் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் ஆர்.கே.நகரில் பணபட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்களும் சிக்கின. இதனையடுத்து இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா, அவரின் தந்தை ஆகியேரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் விஜயபாஸ்கர் தந்தையின் கல்குவாரியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அதிலும் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியதாக தெரிகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான பல இடங்களில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்ன தம்பி, அண்ணன் சி.உதயகுமார் ஆகிய இருவரும் திருச்சியில் உள்ள வருமான வரித் துறை மண்டல அலுவலகத்தில் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதைதொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் இன்று ஆஜராகினார். அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 மணிநேரமாக துருவித்துருவி விசாரணை நடத்தினர். சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அவரிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.