மிகப் பெரிய அளவில் வருமான வரி ஏய்ப்பு.. முத்தூட் நிதி நிறுவனங்களில் அதிரடி ஐடி ரெய்டு!
சென்னை: முத்தூட் நிதி நிறுவனங்களின் பிரதான அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முத்தூட் குழும நிறுவனங்களான முத்தூட் பின்கார்ப், முத்தூட் பச்சப்பன் நிறுவனங்களிலும் மினி முத்தூட், முத்தூட் மெர்க்கண்டைல் நிறுவனங்களிலும் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முத்தூட் பைனான்ஸ், முத்தூட் மினி, முத்தூட் பச்சப்பன் என பைனான்ஸ் நிறுவனங்கள் நகைகளை அடகு பெற்று அதற்கு பணம் கொடுக்கின்றன. இந்தியாவிலேயே மிக அதிக அளவில் தங்க நகைக்கடன்களை வழங்கும் நிறுவனமாக முத்தூட் பைனான்ஸ் விளங்குகிறது.
தற்போதைக்கு, முத்தூட் குழுமத்தின் மொத்த வர்த்தகத்தில் தங்கநகைக்கடன் 90% பங்கு வகிக்கிறது. அதுவே பிரதானமான தொழில்.
கொச்சியைத் தலைமையகமாகக் கொண்ட முத்தூட் நிறுவனத்திற்கு, இன்றைய தேதியில் நாடு முழுவதும் 30,000த்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும் 5,000த்திற்கும் மேற்பட்ட கிளைகளும் உள்ளன. 2009ம் ஆண்டு வாக்கில் 985 கிளைகளாக இருந்து கடந்த சில வருடங்களில் அதன் கிளைகள் பல மடங்காக வளர்ந்துள்ளது.
முத்தூட் நிறுவன கிளைகளில் சுமார் 85 சதவீதம் தென்னிந்திய மாநிலங்களில் அமைந்துள்ளன. சென்னையில் 'சென்னை லைவ்' என்னும் ஆங்கில பண்பலை சானலை நடத்துகின்றனர். நெல்லையில் காற்றாலை மின்னுற்பத்தியிலும் முதலீடு செய்திருக்கின்றனர். ரியல் எஸ்டேட், வாகனக் கடன் போன்ற மற்ற துறைகளிலும் வளர்ச்சி பெற்று வருகிறது முத்தூட் நிறுவனம்.
வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும், ஏடிஎம்-களை தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்ததைத் தொடர்ந்துசென்னையில் 10 உள்பட நாடு முழுவதும் இதுவரை 200 ஏடிஎம்கள் தொடங்கப்பட்டுள்ளன.
வருமான வரி சோதனை
கபாலி படம் வெளியானதை முன்னிட்டு ரஜினி உருவம் பொறித்த நாணயமும் வெளியிட்டது முத்தூட் பின்கார்ப் நிறுவனம். இதனிடையே முத்தூட் குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என்பதால் சோதனை நடைபெறுவதாக தகவல். நகை அடகு கடன் கொடுப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. கருப்புப்பண பதுக்கல் தொடர்பாக எழுந்த புகாரினை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில மணிநேரங்களாக சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.