சரத்குமார் வீட்டைத் தொடர்ந்து ராதிகாவின் ராடான் நிறுவனத்திலும் அதிரடி ஐடி ரெய்டு!
ராதிகாவிற்கு சொந்தமான ராடான் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை: நடிகை ராதிகாவிற்கு சொந்தமாக ராடான் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். கடந்த 7ஆம் தேதி கொட்டிவாக்கத்தில் உள்ள ராதிகா சரத்குமார் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று அவர்களின் அலுவலகத்தில் சோதனை நடைபெறுகிறது.
ஆர்.கே.நகரில் வீடு வீடாக பணம் சப்ளை செய்யப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், அவருக்கு நெருக்கமான துணை வேந்தர் கீதாலட்சுமி, இயக்குநர் குழந்தைசாமி, நடிகர் சரத்குமார், முன்னாள் எம்பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில், 6 கோடி ரொக்கப்பணம் மற்றும் ரூ.185 கோடிக்கு சொத்து ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. தொகுதியில் பண விநியோகம் செய்ததற்கான ஆவணங்களும் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதனையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
டிடிவி தினகரன் ஆதரவு
கடந்த சில தினங்களுக்கு முன்பு டிடிவி தினகரனைச் சந்தித்த சரத்குமார், அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார். அமைச்சர் விஜயபாஸ்கரின் காரில் அவருடன் சென்றுதான் சரத்குமார் ஆதரவு தெரிவித்தார்.
அமைச்சர் விஜயபாஸ்கர்
சரத்குமாரை விஜயபாஸ்கர்தான் பேசி அழைத்துச் சென்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய அதேநேரத்தில், கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமாரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
சரத்குமாரிடம் விசாரணை
சரத்குமார் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பப்பட்டது. சம்மனை ஏற்று, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேற்று காலை 11.30 மணிக்கு சரத்குமார் சென்றார். அவரிடம் அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
ராடான் நிறுவனத்தில் ரெய்டு
இந்த நிலையில் சரத்குமாரின் மனைவி ராதிகாவிற்கு சொந்தமான ராடான் மீடியா நிறுவனத்தில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று சரத்குமாரிடம் பலமணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.