அரசு பஸ்சில் சிக்கிய ரூ. 1 கோடி பணம்.. புதுவையின் முன்னணி ஜவுளிக் கடையில் விசாரணை
சென்னை: புதுச்சேரி அருகே அரசு பஸ்சில் ரூ. 1 கோடி பணம் சிக்கியது தொடர்பாக புதுவையில் உள்ள முன்னணி ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு வந்த அரசுப் பேருந்தில் சோதனை நடத்திய அதிகாரிகள் அதில் ரூ. 1 கோடி பணத்துடன் வந்த நபரைப் பிடித்தனர். பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்தப் பணத்தை புதுச்சேரியில் உள்ள ஒரு முக்கிய ஜவுளிக் கடைக்குக் கொண்டு செல்வதாக அந்த நபர் தெரிவித்தார். ஆனால் உரிய ஆவணம் இல்லை. இதையடுத்து அந்த நபரையும், உடன் வந்த மேலும் 3 பேரையும் போலீஸார் காவல் நிலையம் கொண்டு சென்றனர். நான்கு பேருமே அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் என்று கூறப்படுகிறது.
பெரிய அளவில் பணம் சிக்கியதால் வருமான வரித்துறைக்கும் தகவல் போனது. இதையடுத்து அந்த ஜவுளிக் கடைக்குச் சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தினர்.