அலோ போஸ்ட்மாஸ்டரா.. 5 கிலோ நயம் உளுத்தம் பருப்பு வேணும், அனுப்புறீங்களா?
சென்னை: தீபாவளி பண்டிகை வருவதால், பொதுமக்களுக்கு தேவையான பருப்புகளை நேரடியாக குறைந்த விலையில் தபால் நிலையங்களில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து மக்களுக்கும் பற்றாக்குறை இல்லாமல் பருப்புகள் கிடைக்க இதுபோன்ற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. புனித கங்கா தீர்த்தம் விற்பனைக்கு கிடைத்த வெற்றியை அடுத்து இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ஹெம் பாண்டே தலைமையில் நடைபெற்ற உணவு, விவசாயம், நுகர்வோர் விவகாரம், வர்த்தகம், நிதித்துறை அமைச்சகங்கள் மற்றும் எம்எம்டிசி, நாபெட் நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு இவற்றை கொள்முதல் செய்து இருப்பு வைத்துள்ளது. மாநிலங்களில் அரசு விற்பனை மையங்கள் பெரும்பாலான இடங்களில் இல்லை என்பதால் தபால் நிலையங்கள் மூலம் மத்திய அரசிடம் இருப்பில் உள்ள பருப்பு வகைகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு மாநிலங்களில் விற்பனை நிலையங்கள் அவ்வளவாக இல்லாததால், நாடு முழுவதும் கிளைகளைக் கொண்ட தபால் நிலையங்கள் மூலம் துவரம் பருப்பு, உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளை மானிய விலையில் விற்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பண்டிகை காலத்தில் மக்களுக்கு குறைவின்றி பருப்புவகைகள் கிடைக்கும் என்று மத்திய நுகர்வோர் அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதுபோல், கடலைப்பருப்பு விலையை கட்டுப்படுத்த, சில்லரை விற்பனைக்காக அரசு ஏஜென்சிகளுக்கு பண்டிகை தேவையை கருத்தில் கொண்டு தாராளமாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.
நாடு முழுவதும் 1.54 லட்சம் தபால் நிலையங்கள் உள்ளன. இவற்றில் 1.39 லட்சம் தபால் நிலையங்கள் ஊரக பகுதிகளில் உள்ளன. துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை மாநில அரசுகளுக்கும், நாபெட், மதர் டயரி போன்ற அரசு ஏஜென்சிகளுக்கும் கடந்த சில மாதங்களாக மத்திய அரசு வழங்கி வருகிறது.
நடப்பு ஆண்டில் உள்நாட்டில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்தும், இறக்குமதி செய்தும் 20 லட்சம் டன் பருப்பு வகைகளை இருப்பு வைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தபால் நிலையம் என்றாலே ஸ்டாம்ப், போஸ்ட் கார்டு, கவர் என்றிருந்த நிலை மாறி அங்கு கங்கா தீர்த்தம் விற்பனை செய்யப்பட்டது. இனி பருப்பு விற்பனை செய்யும் இடமாகவும் தபால் நிலையங்கள் மாறப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.