தாம்பரம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளநீர்: வெளியேற்றப்பட்ட குழந்தைகள்
சென்னை: சென்னை தாம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குள் வெள்ளநீர் புகுந்ததால் அங்கிருந்த குழந்தைகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்கள் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இந்நிலையில் தாம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்த குழந்தைகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
மேலும் கிண்டியில் உள்ள சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் பி.ஜி. மாணவிகள் விடுதிக்குள்ளும் வெள்ளம் புகுந்துவிட்டது. இதையடுத்து மாணவிகள் தரை தளத்தில் இருந்து மேல் தளங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஒரு நாள் மழையையே தாக்குப்பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இன்னும் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வேறு அறிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.