லஞ்சம் வாங்கிய போலீசை ஊர்வலமாக அழைத்துச் செல்லக் கோரி காவல் நிலையம் முற்றுகை… போலீஸ் தடியடி
ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆய்வாளரை கைது செய்து ஊர்வலமாக அழைத்துச் செல்லக் கோரி பொதுமக்கள் மங்கலம்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
கடலூர் : லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மங்கலம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். அவரை ஊர்வலமாக அழைத்துச் செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் குதித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மங்கலம்பேட்டை காவல் ஆய்வாளர் தமிழ்மாறன், அடி தடி வழக்கு ஒன்றில் குற்றவாளியை கைது செய்யாமல் இருக்க ரூ.50,000 லஞ்சம் கேட்டுள்ளார்.
குற்றவாளி தரப்பு பேரம் பேசி ரூ.20,000 கொடுக்க ஒப்புக் கொண்டது. இந்தத் தகவல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு திருவாம்பூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் புகார் தெரிவித்தார்.
பொறியில் சிக்கிய போலீஸ்
இதனையடுத்து, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார் இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன், அப்போது, குற்றவாளித் தரப்பில் இருந்து பணத்தை இன்ஸ்பெக்டர் பெறும் போது, கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார் இன்ஸ்பெக்டர்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மங்கலம்பேட்டை காவல்நிலையம் முன்பு ஒன்று திரண்டு பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள்.
காவல்நிலையம் திடீர் முற்றுகை
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டரை ஊர்வலமாக அழைத்துச் செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் திடீரென கோரிக்கை வைத்தனர். மேலும், மங்கலம்பேட்டை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போலீஸ் தடியடி.
போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 1000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலைந்து ஓடினர்.