காவிரியை மீட்க ஒருங்கிணைந்த போராட்டம்- நதிநீர் உரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்
சென்னை: கர்நாடக அரசு மேற்கொள்வதைப்போல சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்தினால் மட்டுமே இந்தப் பிரச்சனையில் மத்திய அரசை செயல்பட வைக்க முடியும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து அதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழக அரசை விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 'நதிநீர் உரிமைப் பாதுகாப்பு மாநாடு' சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பால கிருஷ்ணன், நீரியல் வல்லுனர் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் :
- இந்தியாவிலிருக்கும் தண்ணீர் பற்றாக்குறை கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. குடிநீர், விவசாயம், தொழிற்சாலைகள், கால்நடைகள், மின் உற்பத்தி முதலான பயன்பாடுகளுக்காக ஆண்டொன்றுக்கு சுமார் 1895 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் தேவைப்படுகிறது.
- விவசாயத்தைப் பொருத்தவரை தமிழ்நாட்டில் 46 விழுக்காடு விவசாயம் மட்டும்தான் பாசனத்தை நம்பி இருக்கிறது. மற்றதெல்லாம் வானம்பார்த்த விவசாயம் தான். இதனால் ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் செய்யப்படும் பரப்பளவு குறைந்து கொண்டே போகிறது. இது மிகப்பெரிய உணவுப் பற்றாக்குறையில் தமிழ்நாட்டைத் தள்ளிக் கொண்டிருக்கிறது.
- நடுவர்மன்றத் தீர்ப்பினாலும், நீதிமன்றத் தீர்ப்புகளாலும் தமிழ்நாட்டுக்கு உறுதியளிக்கப்பட்ட நதிநீரைத்தான் நமது அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகியவை நமக்குத் தர மறுக்கின்றன. காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, சிறுவாணி- என ஒவ்வொரு நதியிலும் சட்டவிரோதமாகக் குறுக்கே அணைகளைக் கட்டி தமிழகத்துக்கு வரவேண்டிய தண்ணீரை முடக்குகின்றன. இதனால் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
- இரு மாநிலங்களுக்கு இடையே நதிநீர்ப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டால் அரசியலமைப்புச் சட்டப்படி அதில் தலையிட்டு பாதிக்கப்பட்ட மாநிலத்தின் நதிநீர் உரிமையைக் காக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். ஆனால் அது தனது கடமையைச் செய்யாமல் தேர்தல் லாபத்தைக் கருத்தில்கொண்டு தமிழகத்தை வஞ்சிக்கிறது.
- காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்டவாறு காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவையும் அமைக்காமல் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காலந்தாழ்த்தி வருகிறது.
- இன்னும் நான்கு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் இடைக்கால நிவாரணமாக தமிழ்நாட்டுக்கு வழங்கும்படி கூறிய தண்ணீரிலேயே 2.56 டிஎம்சி நீரைக் குறைத்து கர்நாடகம் வழங்கியிருக்கும் நிலையில், கர்நாடகத்தில் அடுத்து வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இருக்கும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் ஆணையை அவ்வளவு எளிதில் நிறைவேற்றிவிடாது.
- கர்நாடக அரசு மேற்கொள்வதைப்போல சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்தினால் மட்டுமே இந்தப் பிரச்சனையில் மத்திய அரசை செயல்பட வைக்க முடியும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து அதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டுமென தமிழகஅரசை வலியுறுத்துகிறோம்.
- தமிழ்நாடு பாலைவனமாகிவிடாமல் தடுக்க வேண்டுமெனில் தமிழ்நாட்டின் நதிநீர் உரிமை பாதுகாக்கப் படவேண்டும். அதுவே இப்போது தமிழ்நாட்டின் முதன்மையான கடமையாகியுள்ளது. இந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற முன்வருமாறு தமிழக அரசியல் கட்சிகளையும் மக்களையும் இந்த மாநாட்டின் வாயிலாக அறைகூவி அழைக்கிறோம். ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.