ஐஎன்எக்ஸ்க்கு அந்நிய முதலீடு பெற்றத்தர கார்த்தி சிதம்பரம் லஞ்சம்- பாய்ந்தது வழக்கு
கார்த்தி சிதம்பரம் மீது டெல்லி போலீஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
டெல்லி: ஐஎன்எக்ஸ் நிறுவனத்திற்கு வெளிநாட்டு உரிமம் பெற்றுத்தர லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில் டெல்லி போலீஸ் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வெளிநாட்டு ஊடகமான ஐஎன்எக்ஸ் மீடியாவின் முன்னாள் உரிமையாளர் பீட்டர் முகர்ஜி. இவரும் இவரது மனைவி இந்திராணி முகர்ஜியும் தற்போது ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் உள்ளார்.
தவணை முறையில் பணம்
கடந்த 2008ஆம் ஆண்டில், ஐஎன்எக்ஸ் மீடியா கார்த்தியின் அட்வான்டேஜ் ஸ்ட்ரடஜிக் நிறுவனத்துக்கு பங்குகள் ஒதுக்கி, நிதி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்போது இந்த மீடியாவின் உரிமையாளராக இருந்த பீட்டர் முகர்ஜி பல்வேறு தவணைகளாக பணத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், லண்டனில் இருக்கும் ஆர்ட்வியா டிஜிடல் நிறுவனம் கார்த்தி நிறுவனத்துக்கு ரூ. 60லட்சம் பங்குகளை வழங்கியுள்ளது.
ரூ. 60 லட்சம் லஞ்சம்
2008, செப்டம்பர் 22ஆம் தேதி, ஐஎன்எக்ஸ் மீடியாவிடம் இருந்து கார்த்தியின் நிறுவனத்திற்கு ரூ. 35 லட்சம் நிதியாக வந்துள்ளது. அன்றே, ஐஎன்எக்ஸ் மீடியாவிடம் இருந்து நார்த்ஸ்டார் சாப்ட்வேர் சொல்யூசன்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 60 லட்சம் சென்றுள்ளதாக தெரிகிறது.
அமலாக்கத்துறை நோட்டீஸ்
அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் ரூ. 4 கோடி மட்டுமே பெற ஐஎன்எக்ஸ் அனுமதி பெற்று, பின்னர் ரூ. 350 கோடியை பெற்றதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் கார்த்திக்கு பங்கு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறை கார்த்திக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசில், ரூ.45 கோடி அளவுக்கு கார்த்தி அந்நிய செலாவணி மோசடி செய்து இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது.
சிபிஐ ரெய்டு
அந்நிய செலவாணி குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீட்டில் இன்று காலை முதல் 5 மணி நேரத்திற்கு மேலாக சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
டெல்லி போலீஸ் வழக்கு
இதனிடைய ஐஎன்எக்ஸ் நிறுவனத்திற்கு அந்நிய முதலீடு பெற்றுத்தர லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதேபோல இந்திராணி முகர்ஜி மீதும், பீட்டர் முகர்ஜி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.