மணிப்பூரை விட்டு சிறிது நாட்கள் தள்ளியிருக்க விரும்புகிறேன் .. இரோம் ஷர்மிளா கோவையில் பேட்டி
தேர்தல் தோல்வியில் ஏற்பட்ட வேதனையில் இருந்து மீள, சிறிது நாட்களுக்கு மணிப்பூரை விட்டு தள்ளியிருக்க விரும்பவதாக இரோம் ஷர்மிளா கூறியுள்ளார்.
கோவை : தேர்தல் தோல்வியில் ஏற்பட்ட வேதனையில் இருந்து மீள, சிறிது நாட்களுக்கு மணிப்பூரை விட்டு தள்ளியிருக்க விரும்பவதாக இரோம் ஷர்மிளா கூறியுள்ளார்.
மணிப்பூரில் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்தவர் இரோம் ஷர்மிளா. இதற்கிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டு , புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.
இதனையடுத்து நடந்து முடிந்த மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் தெளபால் தொகுதியில் போட்டியிட்ட இரோம் ஷர்மிளா, 87 வாக்குகள் மட்டுமே பெற்று 3 முறை முதல்வராக இருந்த இபோபி சிங்கிடம் தோல்வியடைந்தார்.
இந்நிலையில் மணிப்பூரில் இருந்து விமான மூலம் கோவைக்கு இன்று அவர் வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மணிப்பூரில் பாஜக தனது பணம் மற்றும் அதிகாரத்தை வைத்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இது பற்றி மணிப்பூர் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். மேலும் சட்டசபைத் தேர்தல் தோல்வியால் வேதனையில் இருந்து மீண்டு வர சிறிது நாட்கள் மணிப்பூரை விட்டு விலகியிருக்க விரும்புவதாக அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து கேரளாவின் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் உள்ள தியான மையத்தில் சில நாட்கள் தங்கியிருக்க இரோம் ஷர்மிளா திட்டமிட்டுள்ளார்.