காங்கிரஸ் இல்லாத இந்தியா? தமிழிசை இப்படிப் பேசலாமா?
- கதிர்
காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகி வருவதை தேர்தல் முடிவு காட்டுகிறது என்கிறார் தமிழிசை.
வட இந்தியர்கள் எப்படியும் பேசட்டும். தமிழிசை பேசலாமா?
குமரி அனந்தனும் வசந்த குமாரும் கோடிக்கணக்கான காங்கிரஸ் குடும்பத்தினரும் இந்தியாவில் வாழ தகுதி அற்றவர்களா?
காங்கிரசை ஆட்சிக்கு வர விட மாட்டோம் என்று சொல்லுங்கள். ஆட்சி செய்யும் மாநிலங்களில் அதை வீழ்த்துவோம் என்று பேசுங்கள். அதெல்லாம் அரசியல் நாகரிக வரம்புக்குள் வருபவை.
காங்ரஸ் முக்த் பாரத் என்ற இந்தி கோஷத்தை தமிழில் மொழி பெயர்க்காதீர்கள். முஸ்லிம் முக்த் பாரத் கோஷத்தை முதலில் உருவாக்கியவர்களே இதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்று மக்களுக்கு தெரியும்.
அந்த கோஷத்தை மீறிதான் பஞ்சாப், மணிப்பூர், கோவா மக்கள் காங்கிரசுக்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள்.
வறுமை இல்லாத இந்தியா. ஊழல் இல்லாத இந்தியா. குற்றங்கள் இல்லாத இந்தியா. பெண்கள், குழந்தைகளை வதைக்காத இந்தியா. தகுதியும் திறமையும் உள்ளவர்களை நிராகரிக்காத இந்தியா...
இன்னும் எத்தனையோ இந்தியாக்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அனைத்தையும் மறந்துவிட்டு, இன்னும் எத்தனை காலம்தான் காங்கிரஸ் ஃபோபியாவுடன் நடமாடப் போகிறீர்கள்?
ஊழல், நிர்வாக மெத்தனம், குடும்ப ஆதிக்கம் என்பதையெல்லாம் தாண்டி காங்கிரஸ் ஒரு வாழ்க்கை முறையாக, இந்திய அரசியலின் ஓர் அடையாளமாக மாறிக்கிடக்கிறது. குடிமக்களில் எந்தப் பிரிவுக்கும், உடன்படாத எந்தக் கருத்துக்கும் கதவை சாத்தாத ஒரே அரசியல் இயக்கம் அதுதான்.
All inclusive Indian liberalism அதன் இதயமாக துடித்துக் கொண்டிருக்கிறது. ஏனைய சித்தாந்தங்களுடனான நம் மக்களின் பரீட்சார்த்த உறவுக் காலங்கள் முடிவுக்கு வந்தபின் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வரும். அதற்கு எத்தனை ஆண்டுகளும் ஆகலாம்.
அன்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக் கூடிய வலிமையான தலைமை இல்லாமல் போனால் அக்கட்சியை உரிய இடத்தில் வைப்பார்கள் மக்கள். அப்போதும் அந்தப் பொறுப்பை இன்னொரு கட்சிக்கு தாரை வார்க்க மாட்டார்கள்.