சூட்டோடு சூடாக பெரும்பான்மையை நிரூபிக்க ஜரூரான எடப்பாடி அரசு... ஹைகோர்ட் தீர்ப்பால் 'ஷாக்'
18 எம்எல்ஏக்களை நீக்கிய கையோடு பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாரான முதல்வர் பழனிசாமி தரப்புக்கு நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கியதாக அறிவித்த கையோடு இன்றோடு நீதிமன்ற தடையும் விலகிவிட்டால் உடனடியாக பெரும்பான்மையை நிரூபித்துவிடலாம் என்று எண்ணிய முதல்வரின் திட்டத்திற்கு ஷாக் கொடுக்கும் விதமாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமிக்கு பெரும்பான்மை இல்லை என்று தொடர்ந்து திமுகவும், தினகரனும் குடைச்சல் கொடுத்துக் கொண்டு வந்தன. ஆளுநரையும் சந்தித்து இரண்டு தரப்பும் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று மனு மேல் மனுவாக அளித்து வந்தன.
இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் சட்டசபையில் முதல்வர் பழனிசாமிக்கு பெரும்பான்மை கிடைத்துவிட்டது, ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்ற நிலை உருவானது.
கட்சித் தாவல் இல்லை
ஆனால் தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்று தான் ஆளுநரிடம் மனு அளித்தோம். கட்சிக்கு விரோதமான எந்தச் செயலையும் செய்யவில்லை, இதனால் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதில் எந்தப் பலனும் இல்லை.
Recommended Video
ஒத்திவைப்பு
முதல்வர் பழனிசாமி இல்லாமல் வேறு யார் முதல்வரானாலும் ஆதரவளிக்கத் தயார் என்றும் நீதிமன்றத்தில் எம்எல்ஏக்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தெரிவித்தார். இதனையடுத்து வழக்கில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 4ம் தேதிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தடை நீட்டிப்பு
மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்ட தடை நீடிப்பதாகவும், மறு உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக் கூடாது என்றும் நீதிபதி துரைசாமி கூறியுள்ளார். இதனால் அவசர அவசரமாக 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து, அன்றே 18 தொகுதிகளும் காலி என்று பரபரத்த எடப்பாடி தரப்புக்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளது.
முதல்வருக்கு பின்னடைவு
நீதிமன்ற உத்தரவு வந்தவுடன் ஆளுநர் அடுத்தகட்டநடவடிக்கை எடுப்பார் என்று கூறப்பட்டது. இதற்காகவே நேற்று பிற்பகலில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகம் வந்தார். ஆனால் முதல்வர் பழனிசாமி அணி காட்டிய வேகம் நீதிமன்றத் தீர்ப்பால் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது.