தவிடுபொடியான "சின்னம்மா" சபதம்.. பிரிந்த சமாதியிலேயே இணையும் அதிமுக.. "அம்மா" ஹேப்பி அண்ணாச்சி!
அதிமுகவை தனது தலைமையில் கட்டிக்காப்பேன் என்று சசிகலா சிறை செல்லும் முன்னர் எடுத்த சபதத்தை தவிடுபொடியாக்கி, சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு அதிமுக அணிகள் இணைந்து செயல்பட முன்வந்துள்ளன.
சென்னை : அதிமுகவை தன்னுடைய தலைமையில் சிறப்பாக வழிநடத்துவேன் என்று சிறை செல்லும் முன்னர் சசிகலா ஜெயலலிதா சமாதியில் எடுத்த சபதத்தை தவிடுபொடியாக்கும் வகையில் அவரது குடும்பத்தினரை ஒதுக்கி வைத்துவிட்டு அதிமுக அணிகள் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர்.
ஜெயலலிதா காலமான உடனே கட்சியினரை வைத்து கெஞ்சல் நாடகம் நடத்தி கட்சியை கைப்பற்றிய சசிகலா, முதல்வராக முயற்சித்தார். ஆனால் பழம் கனிந்து வரும் சமயத்தில் தடியால் அடித்தது போல சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட சிறைக்கு சென்றுவிட்டார் சசிகலா.
பிப்ரவரி 14ம் தேதி சிறைக்கு செல்லும் முன்னர் ஜெயலலிதா சமாதியில் சசிகலா சபதம் ஏற்றார். இதற்கு பல அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டன. துரோகிகளிடமிருந்து கட்சியை காப்பாற்றி சிறப்பாக கட்சியை வழிநடத்துவேன் என்று சசிகலா 3 முறை சமாதியில் ஓங்கியடித்து சபதம் செய்ததாக கூறப்பட்டது. ஆனால் ஜெயலலிதாவின் ஆன்மா சசிகலா கட்சிக்கும் பதவிக்கும் வருவதை விரும்பாமலே அவரை சிறைக்கு அனுப்பிவிட்டது என்றும் கூறப்பட்டன.
சமாதியில் தொடங்கிய எதிர்ப்பு அணி
முன்னதாக ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்து விட்டுத் தான் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி திருப்பத்தை அறிவித்தார். ஜெயலலிதாவின் ஆன்மா உந்தியதாலேயே சமாதிக்கு வந்ததாகவும், நிர்ப்பந்தம் காரணமாகவே முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் அறிவித்து பிப்ரவரி 7ம் தேதி முதல் தனி அணியாக செயல்பட்டார்.
ஜெ. தீபாவும் சமாதியில் வந்து ஆதரவு
ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபாவும் பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதா சமாதிக்கு வந்து ஓ.பிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்தார். சமாதி அரசியல் என்று விமர்சிக்கும் அளவிற்கு பரபரப்புடன் இருந்தது மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம்.
இணைப்பு படலம்?
இந்நிலையில் சமாதியில் இருந்து கிளம்பிய எதிர்ப்பு அரசியல் இன்று ஜெயலலிதா சமாதியிலேயே முடிவு காணும் நிலைக்கு வந்துள்ளது. பல்வேறு இழுபறி நிலைகளைத் தாண்டி சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
மெரினாவில் ஒன்று கூடும் அணிகள்?
இன்று இரவுக்குள் இரு அணிகளும் ஜெயலலிதா சமாதிக்கு வந்து அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜெயலலிதா சமாதி அலங்கரிக்கப்பட்டுள்ளதோடு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அதிமுகவினரும் அதிக அளவில் கூடி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் விருப்பம் இது தானா?
சசிகலா குடும்பம் அதிமுகவில் இருக்கக் கூடாது என்பதைத் தான் ஜெயலலிதாவும் விரும்பினார். அதனால் தான் அதிகார மையமாக சசிகலா வலம் வந்தாலும் அவரது குடும்பத்தினருக்கு கட்சியில் பொறுப்பும், அரசில் பதவியும் அளிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. ஒரு வேளை அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பம் நீக்கப்பட்ட இந்தச் சூழலைத் தான் ஜெயலலிதாவும் விரும்பினாரா?