என்னை மாதிரி கட்சி ஆரம்பித்து கஷ்டப்படாதீங்க மக்களே.. ரஜினி, கமலுக்கு விஜயகாந்த் மெசேஜ் இதுதானா?
நடிகர்களின் வரவால் கட்சி பாதிக்கும் என்பதால் ரஜினி, கமல் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று சொல்கிறாரா அல்லது, தான்பட்ட கஷ்டத்தை நண்பர்களான அவர்கள் பட வேண்டாம் என நினைத்து சொன்னாரா கேப்டன் விஜயகாந்த்?
சென்னை : நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று கேப்டன் விஜயகாந்த் சொல்வது அவர்களின் கருத்தா, அல்லது அவர்கள் அரசியலுக்கு வந்தால் தேமுதிகவிற்கு ஆபத்து வரும் என்று பயப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆங்கில நாளேட்டிற்கு அவர் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் பேச்சுகள் குறித்தும் பேட்டியளித்துள்ளார். அதில் முன்னணி நடிகர்களின் அரசியல் வருகை குறித்து எதிர்மறை கருத்துகளை தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார் என்று அவரது தொண்டர்கள் படு குஷியாக ரெடியாகிவருகின்றனர். அநேகமாக அவரது பிறந்தநாளின் போது 20 வருட அரசியல் வருகை பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் காத்துக் கிடக்கின்றனர்.
ஆதரவு
இதே போன்று நான் என்றோ அரசியலுக்கு வந்து விட்டேன் என்று அரசியல் அரங்கில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் நடிகர் கமல்ஹாசன். மக்களை அன்றாடம் சுரண்டித் தின்னும் ஊழலை கையில் எடுத்ததன் மூலம் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது மக்களும் பெரிய அளவில் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எப்ப சொன்னாரு?
இந்நிலையில் ரஜினி, கமல் அரசியல் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், தனக்கு அரசியலுக்கு வருவதில் விருப்பமில்லை என்று ரஜினி சொன்னதை சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் ரஜினியின் நண்பர் ராஜ்பகதூரும் கூட தொடக்கத்தில் ரஜினி அரசியலுக்கு வர பயப்பட்டார் ஆனால் அவருடைய மனநிலை தற்போது மாறியுள்ளது என்றும் கூறியிருந்தார்.
கமலுக்கும் அதே தான்
நிலைமை இப்படி இருக்க கேப்டன் விஜயகாந்த் நடிகர் ரஜினிகாந்த்திடம் எப்போது பேசிய விவரங்களை இப்போது சொல்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே போன்று கமல்ஹாசன் அரசியலுக்கு வரமாட்டார் என்று சொல்லும் கேப்டன், அரசை எதிர்த்து ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதை மட்டும் வரவேற்கிறார்.
பயமா, அனுபவமா?
ஒருவேளை தங்களின் கட்சியை பலப்படுத்தும் பணியில் இருக்கும் கேப்டன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் அது தனது கட்சிக்கு பாதகம் என்று நினைக்கிறாரா. அல்லது நடிப்பை விட்ட அரசியலுக்கு வந்து கட்சி தொடங்கிய தன்னைப் போல அவர்களின் நிலைமையும் மாறி விடும் என்பதால் இந்த கருத்தை தெரிவித்துள்ளாரா என்பது தான் தற்போதைய கேள்வியாக உள்ளது. ஏனெனில் முதல்வராக முன்னேறுவார் என எதிர்பார்க்கும் அளவுக்கு அரசியலில் திடீர் வளர்ச்சியடைந்த விஜயகாந்த் பிற்பாடு, திடீரென பெரும் சரிவை சந்தித்து நிர்வாகிகளை தக்க வைக்க முடியாமல் கஷ்டப்படுவது குறிப்பிடத்தக்கது.