கோவை வரும் மோடிக்கு கருப்புக் கொடி… 'திரும்பிப் போ மோடி' திவிக, தபெதிக போராட்டம்
ஈஷா நடத்தும் நிகழ்ச்சிக்காக கோவைக்கு வருகை தரும் மோடிக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. ‘திரும்பிப் போ மோடி’ என திவிக, தபெதிக ஆகிய அமைப்புகள் கருப்புக் கொடி போராட்டம் நடத்துகின்றனர். இதனால் கோவையில் பதற
கோவை: மகாசிவராத்திரியான இன்று 112 அடி சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி கோவைக்கு இன்று மாலை வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போர்கொடி தூக்கியுள்ளன.
நில ஆக்கிரமிப்பு, ஆதிவாசி நிலங்களை அபகரித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள ஜக்கி வாசுதேவ் ஈஷா என்ற யோகா மையத்தை நடத்தி வருகிறார்.
இவர் இன்று மாலை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 112 அடி உயரத்தில் சிவனின் சிலை ஒன்றை திறக்க உள்ளார். இதற்காக பெரிய அளவில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பிரதமர் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி அழைக்கப்பட்டுள்ளார். இதில் கலந்து கொள்ள தனி விமானத்தில் கோவைக்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார். மாலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு பின்னர் டெல்லிக்கு உடனடியாக புறப்படுகிறார்.
'திரும்பிப் போ மோடி'
மோசடிப் பேர்வழியான ஈஷா ஜக்கி வாசுதேவ் நிகழ்ச்சி வரக் கூடாது என்று கூறி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இன்று காலை சூலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. காட்டை அழித்து, ஆதிவாசிகளை அச்சுறுத்தி நிலங்களை அபகரிக்கும் ஜக்கி வாசுதேவ் நடத்தும நிகழ்ச்சி வராதே.. திரும்பிப் போ என்ற கோஷத்துடன் திவிக கருப்பிக் கொடி போராட்டத்தை நடத்துகிறது.
கருப்புக் கொடி
கோவைக்கு மோடி வரும் போது தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கருப்புக் கொடி காட்டும்போராட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தின் உயிர் பிரச்சனையான காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சனைக்கெல்லாம் என்னவென்று கேட்காத மோடி காட்டு நிலங்களை கபளீகரம் செய்யும் ஜக்கி வாசுதேவ் நிகழ்ச்சி எப்படி வரலாம் என்ற கேள்வியை முன் வைத்து தபெதிக போராட்டத்தை நடத்துகின்றனர்.
ஆதிவாசிகள் எதிர்ப்பு
தங்களை நிலங்களை அபகரித்து ஏமாற்றி வரும் ஜக்கி வாசுதேவ் நடத்தும் நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வரக் கூடாது என்று ஆதிவாசிகள் அமைப்பும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதுதவிர சுற்றுசூழல் இயக்கங்களும் மோடி வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
5 அடுக்கு பாதுகாப்பு
பல்வேறு அமைப்புகள் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், கோவையில் 5 அடுக்கு பாதுகாப்பிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5000 போலீசார் மோடி இறங்கும் விமான நிலையத்தில இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவையில் பதற்றம் நிலவி வருகிறது.