3 மாவட்டங்களில் ஐஎஸ்ஐஎஸ் காலூன்றி விட்டது.. தமிழகத்திற்கு தேவை ஜனாதிபதி ஆட்சி: சு.சுவாமி
சென்னை: தமிழகத்தின் 3 மாவட்டங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் வேரூன்றி விட்டதாக பாஜக உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிவிட்டர் மூலம் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளதாவது: இறுதியாக நமது அரசு, ஐஎஸ்ஐஎஸ் செயல்பாடுகளை கவனத்தில் கொள்ள ஆரம்பித்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை இந்தியாவில் இருந்து முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமானால், ஜம்மு காஷ்மீர் மற்றும் தமிழகத்தில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டியது அவசியம். அமெரிக்கா, இஸ்ரேலுடன் இந்தியா இணைந்து இதை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் அடிக்கடி ஐஎஸ்ஐஎஸ் கொடி பறக்கவிடப்படுவதை மனதில் வைத்தும், குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனுக்கு ஆதரவாக அம்மாநில எம்.எல்.ஏ ஒருவரே பேரணி நடத்தியதையும் வைத்து சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு தெரிவித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோல, யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதை தமிழகத்தில் செயல்படும், சில இஸ்லாமிய அமைப்புகள், சில அரசியல் கட்சி தலைவர்கள் கண்டித்ததையும் குறிப்பிட்டு சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு தெரிவித்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்த யூகத்தை மெய்ப்பிக்கும் வகையில், அவரது மற்றொரு டிவிட் அமைந்துள்ளது.
'தமிழகம் அமைதியை விரும்பும் மாநிலம். அதற்கு ஏன் குடியரசு தலைவர் ஆட்சி அவசியம்' என்ற தொனியில் ஒரு டிவிட்டர் ஃபாலோவர் கேட்ட கேள்விக்கு, சுப்பிரமணியன் சுவாமி அளித்துள்ள பதிலில் "இல்லை. தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் ஐஎஸ்ஐஎஸ் வேரூன்றிவிட்டது. எல்டிடிஇ அமைப்பில் இருந்தவர்கள் ஆதரவு இதற்கு உள்ளது" என்று கூறியுள்ளார்.