சேலம் தலித் இளைஞரின் மறுபிரேத பரிசோதனை அறிக்கை... உறவினரிடமும் தர கோர்ட் உத்தரவு
சேலம்: ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சேலம் மாணவரின் பிரேத பரிசோதனை அறிக்கையின் நகலை அவரது உறவினரிடமும் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல் ராஜ் (23). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் நாமக்கல் மாவட்டம், பள்ளிப் பாளையம் கிழக்கு தொட்டி பாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
காதல் விவகாரத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக அவரது தாய் சித்ரா மற்றும் உறவினர்கள், பல்வேறு அமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு அடிப்படையில், கடந்த 27-ம் தேதி கோகுல்ராஜின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவக் குழுவினர் மூலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனைக்கு பின்னர் கோகுல்ராஜின் உடலை அவரது தாய் மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்து வருவதோடு, இந்த வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்யும் வரை உடலை பெறமாட்டோம் எனக் கூறி வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் கோகுல்ராஜின் தாய் சித்ரா மற்றும் உறவினர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சேலம் அரசு மருத்துவமனை முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர். இதையடுத்து, 170 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் மறு பிரேத பரிசோதனை அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 6-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இந்த பிரேத பரிசோதனை அறிக்கையின் நகலை உயிரிழந்த மாணவரின் உறவினரிடமும் தரும்படி சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.