சென்னையில் ரூ.10 லட்சம் கேட்டு ஐடி ஊழியர் கடத்தல்... சினிமா பாணியில் மீட்ட போலீஸ்
சென்னை: சென்னையில் ஐடி ஊழியரை கடத்தி வைத்துக் கொண்டு ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த கடத்தல் கும்பலை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் பிரேம்குமார், சந்திப்சாரி. எம்.பி.ஏ பட்டதாரிகளான இருவரும் சென்னை கேளம்பாக்கம், பல்லவன் கார்டனில் தங்கி தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். கடந்த 27-ந் தேதி வழக்கம்போல் இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர்.
வேலை காரணமாக பிரேம்குமார் அலுவலகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இரவு 9 மணிக்கு சந்திப்சாரி வீட்டுக்கு திரும்பியுள்ளார். ஆனால், பிரேம்குமார் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சந்திப்சாரி, பிரேம்குமாரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது. அவரது மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மறுநாள் சந்திப்சாரி, பிரேம்குமாரை காணவில்லை என்று தாழம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடத்தல்
புகார் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்த சந்திப்சாரிக்கு மர்ம நபர் ஒருவர் போன் கால் செய்துள்ளார். அதில் பேசியவர், பிரேம்குமாரை தாங்கள் கடத்தி வைத்திருப்பதாகவும், அவர் உயிரோடு வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும். மாறாக போலீசுக்கு போனால் பிரேம்குமாரை கொலை செய்து விடுவோம் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார்களாம். இதையடுத்து, சிறிது நேரத்திலேயே மற்றொரு போன் கால் வந்துள்ளது. அதில் பேசியவர், கேளம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு ரூ.10 லட்சம் கொண்டு வரும்படி கூறியுள்ளார்.
முதல் முயற்சி தோல்வி
இதனால் அச்சத்தில் இருந்த சந்திப்சாரி, இது குறித்த தகவலை உடனடியாக போலீஸிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலீஸ் டீம் மாறுவேடத்தில் அந்த பகுதிக்கு சென்று, கடத்தல்காரன் என நினைத்து போனில் பேசியவரை பிடித்ததாக கூறப்படுகிறு. இதனால், அங்கிருந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் அங்கிருந்து நைசாக நழுவி விட்டார்களாம்.
மீண்டும் மிரட்டல்
தப்பித்துச் சென்ற கடத்தல் கும்பல், மீண்டும் சந்திப்சாரிக்கு போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, போலிஸிக்கு தகவல் கொடுத்ததால் இனி உனது நண்பரை உயிரோடு பார்க்க முடியாது என கூறியுள்ளனர். இதைக்கேட்ட சந்திப்சாரி அழுதவாறே, நான் தவறு செய்துவிட்டேன். தற்போது நீங்கள் சொல்லும் இடத்திற்கு பணத்தை கொண்டு வருகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள், சந்திப்சாரியை பணத்துடன் ஈ.சி.ஆருக்கு வருமாறு கூறியுள்ளனர்.
மடக்கிப் பிடித்த போலீஸார்
இரவு 11.30 மணியளவில் சந்திப்சாரி அவர்கள் வரச்சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது, மோட்டார் சைக்களில், கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவர் வந்தார். சந்திப்சாரியின் சட்டையை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் அணிந்து கொண்டு, அவரே சந்திப்சாரி போல கடத்தல் கும்பலிடம் பேசினார். அவர் கையில் கறுப்பு நிற பையைக் கொண்டு சென்றார். அதைப் பெறுவதற்காக வந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவரை, சப் இன்ஸ்பெக்டர் மடக்கிப் பிடித்தார்.
பீரேம் குமார் மீட்பு
விசாரணையில் அவரது பெயர் பார்த்திபன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் பிரேம்குமாரை மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் அடைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். மேலும், கடத்தல் கும்பலைச் சேர்ந்த மற்றவர்கள், பணத்தைப் பெற ஓ.எம்.ஆர் சாலையில் காருடன் காத்திருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, போலீஸ் டீம் சம்பவ இடத்துக்கு சென்று கடத்தல் கும்பலைச் சேர்ந்த பிரவீன் பாலாஜி, விவேக்ராஜ், அரக்கோணத்தை சேர்ந்த ஜெயசீலன் ஆகியோரை கைது செய்து பிரேம்குமாரை மீட்டுள்ளனர்.
பணம் சம்பாதிக்க கடத்தல்
அவர்களிடம் 2 கார்கள், ஒரு பைக் மற்றும் 4 பட்டா கத்திகள், மயக்க மருந்து ஸ்பிரே, பிளாஸ்டர், நைலான் கயிறு என கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டவற்றை போலீஸார் கைப்பற்றினர். கைதானவர்களில் பிரவீன் பாலாஜி, விவேக்ராஜ் இருவரும் பி.இ பட்டதாரிகள். மேலும் 2 பேரும் உறவினர்கள். பிரவீன்ராஜ் கம்ப்யூட்டரை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். அப்போது இன்ஜினியரிங் படித்த பார்த்திபனுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பார்த்திபனின் நண்பர் ஜெயசீலன். இவர்கள் அனைவரும் ஒன்றாக கூட்டு சேர்ந்து, ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுபவர்களை கடத்தினால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் பிரேம்குமாரை கடத்தியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
படத்தில் வரும் காட்சிகளைப் போல நிஜத்திலேயே கடத்தல் கும்பல் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,.