எனக்கென்னமோ எடப்பாடி மேல சந்தேகமாவே இருக்கு.. ஓபிஎஸ் அதிரடி!
கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்கியிருந்தபோதும் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியிருக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார்.
கோவை: பெங்களூரில் குஜராத் எம்எல்ஏ-க்கள் தங்கியிருந்த போது ரெய்டு நடத்திய
வருமான வரித் துறை அதிகாரிகள் கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்கியிருந்தபோதும் நடத்தியிருக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
தங்கள் நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை அதிமுகவின் அணி இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துவிட்டார். எனினும் அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என்று அதிமுக அம்மா அணியினர் தொடர்ந்து கூறிவருகிறது.
நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம்
இதுகுறித்து கோவையில் அவர் அளித்த பேட்டியில், அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து எங்களுடைய நிலைப்பாட்டை ஏற்கெனவே தெரிவித்து விட்டோம். அம்மா அணியினர் அவர்களாகவே பேசிக் கொள்வதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது.
தமிழக பாடத்திட்டத்தில் மாற்றம்
தமிழக பாடத்திட்டம் முழுமையாக நீட் தேர்வுக்கு தகுந்தாற்போல முழுமையாக மாற்ற வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டிடிவி தினகரன் இடையே உள்ள மோதலை கூர்ந்து கவனித்து வருகிறோம்.
எடப்பாடியின் நாடகம்
சசி குடும்பத்தை அதிமுகவிலிருந்து ஒதுக்கி விட்டதாக எடப்பாடி நாடகம் ஆடுகிறாரோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. சசிகலா குடும்பத்தை ஒதுக்கி விட்டதாக கூறுவதன் உண்மைத்தன்மை குறித்து எடப்பாடி விளக்கம் அளிக்க வேண்டும்.
கூவத்தூரிலும்...
பெங்களூரில் குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தங்கியுள்ள விடுதிகளில் வருமான வரித் துறை சோதனை நடத்தியுள்ளனர். அதே போல் கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்கியிருந்தபோதும் நடத்தியிருக்கலாம் என்றார் அவர்.