அப்பல்லோ குழும மருத்துவமனைகளில் ஐ.டி ரெய்டு நிறைவு... ஆவணங்கள், பணம் பறிமுதல்
சென்னை: அப்பல்லோ மருத்துவ குழும அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வந்த சோதனை முடிவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு வரை நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த ஆவணங்களின் உண்மை தன்மை குறித்த ஆய்வும் நேற்றே மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்த தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அப்பல்லோ மருத்துவமனைக்கு டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவமனைகளும், மருந்துக் கடைகளும் உள்ளன. வருமான வரித்துறையினர் சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட 50 இடங்களில் ஒரே நேரத்தில் அப்பல்லோ நிறுவனத்துக்கு சொந்தமான மருத்துவமனைகள், அலுவலகங்கள், கிடங்குகள், மருந்துக் கடைகள் ஆகியவற்றில் செவ்வாய்கிழமையன்று சோதனை செய்தனர்.
சென்னையில் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை, தேனாம்பேட்டை மருத்துவமனை, தண்டையார்பேட்டை மருத்துவமனை உள்ளிட்ட 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாகத் தெரிகிறது. செவ்வாய்கிழமையன்று காலை 8 மணிக்கு அனைத்து இடங்களிலும் தொடங்கிய சோதனை நேற்றும் நீடித்தது.
நேற்று நள்ளிரவு வரை நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த ஆவணங்களின் உண்மை தன்மை குறித்த ஆய்வும் நேற்றே மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்த தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக அப்பல்லோ மருத்துவ குழுமம் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என எழுந்த புகாரை அடுத்து கடந்த 2 நாள்களாக இந்தியா முழுவதும் உள்ள அப்பல்லோ குழும அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வந்தது. வருமானவரித்துறையைச் சேர்ந்த 300 அதிகாரிகள் 30 இடங்களில் இந்த சோதனையை நடத்தினர்.
வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கை, சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. வருமானவரி சோதனை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அப்பல்லோ மருத்துவக் குழுமத்தில் உள்ள மருத்துவமனைகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அந்தச் சோதனைக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் தரப்பில் இருந்து முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது. பொறுப்புணர்வோடு முறையாகவும் நேர்மையாகவும் மருத்துவமனைகளை அப்பல்லோ குழுமம் நிர்வகித்து வருகிறது. நோயாளிகளும் பங்குதாரர்களும் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பழுது ஏற்படாத வகையில் நடந்து கொள்வோம் என்பதை உறுதி செய்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.