சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகள், அலுவலகங்களில் ரெய்டு.. ரொக்கம் பறிமுதல்!
மதுரை: பிரபலமான சினிமா பைனான்சியர் மதுரை அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அவரது வீட்டிலிருந்து கணக்கில் வராத ஏராளமான ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.
தமிழ் சினிமா உலகில் எத்தனையோ பைனான்சியர்கள் இருந்தாலும், அதிரடி பைனான்சியர் என்ற பெயரைப் பெற்றவர் மதுரை அன்பு எனப்படும் அன்புச் செழியன்.
மதுரையில் சாதாரண பைனான்சியராக இருந்தவர், தொன்னூறுகளின் இறுதியில் திடீரென சினிமா பைனான்சியராக உருவெடுத்தார்.
கொடுத்த கடனை வசூலிக்க அன்புச் செழியன் பின்பற்றிய வழிமுறையே அலாதி. அதனை நடிகைகள் ரம்பா, தேவயானி போன்றவர்களைக் கேட்டால் கதைகதையாகச் சொல்வார்கள். கடன் பெற்றவர்களின் சொத்துக்களைக் கைப்பற்றிக் கொள்வது அல்லது சம்பந்தப்பட்டவர்களையே சிறைப்பிடிப்பது இவர் பாணி என்பார்கள்.
இயக்குனர் ஜி.வி.வெங்கடேஸ்வரன் தற்கொலை வழக்கில் பரபரப்பாக பேசப்பட்டவர் அன்புசெழியன். இவர் அழகிரி, சசிகலா உள்ளிட்டோருக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் திரையுலகில் கூறுவார்கள்.
அழகிரி மகன் துரைதயாநிதி தயாரிப்பு மூலம் வெளிவந்த தூங்காநகரம், உள்ளிட்ட பல படங்கள் வெளிவர அன்புவின் பைனான்ஸ்தான் முக்கிய காரணம்.
பின்னர் ஒரு விநியோகஸ்தராக உருவெடுத்த அன்பு, இப்போது கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் தனி தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துவிட்டார். சமீபத்தில் வெளியான வெள்ளக்காரத் துரை இவரது தயாரிப்புதான்.
இப்போது தயாராகிவரும் சில படங்களுக்கு இவர்தான் பைனான்சியர். சொந்தப் படமும் எடுத்து வருகிறார். இந்த நிலையில்தான் வருமான வரித்துறையினர் இன்று அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையின் போது கணக்கில் வராத பணமும், ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.