சேட்டிலைட் போனுடன் இலங்கை செல்ல முயன்ற இத்தாலி நாட்டுக்காரர் சென்னையில் கைது!
சென்னையில் இருந்து கொழும்புவிற்கு இன்று காலை அந்த நாட்டு விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் இத்தாலியை சேர்ந்த பயணி ஒருவரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
அவரது சூட்கேசை சோதனை செய்த போது அதில் வித்தியாசமான எலக்ட்ரானிக் சாதனம் ஒன்று இருந்தது. சந்தேகத்தின் பேரில் அதனை எடுத்து பார்த்த போது அது ‘சேட்டிலைட்' செல்போன் என தெரிய வந்தது.
சேட்டிலைட் தொலைபேசி பயன்பாட்டுக்கு இந்தியாவில் கடும் கட்டுப்பாடு உள்ளது. ஒருவேளை அதுபோன்ற போன்களை பயன்படுத்த வேண்டுமானால் உரிய அனுமதி பெற வேண்டியது அவசியம்.
ஆனால் அதுபோன்ற எந்த அனுமதியையும் இத்தாலி நாட்டுக்காரர் வைத்திருக்கவில்லை. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பெயர், நேரி ஜியோவான்னி (69) என்று தெரியவந்தது. டிசம்பர் 7ம் தேதி முதல் சென்னையிலுள்ள ஒரு ஹோட்டலில் அவர் தங்கியிருந்துள்ளார்.
இந்தியாவிற்குள் சேட்டிலைட் போனுடன் வந்தபோது விமான நிலைய அதிகாரிகள் சோதித்து பார்க்காமல் விட்டுவிட்டனரா, அல்லது இந்தியா வந்த பிறகு இந்த போன் அவர் கைக்கு சென்றதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பையில் 2008ம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின்போது சேட்டிலைட் போன்களை தீவிரவாதிகள் பயன்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.