துணிச்சல் மிக்க நிர்வாகியை இழந்துவிட்டோம்.. ஜெ. மறைவிற்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அஞ்சலி
ஜெயலலிதாவின் மறைவிற்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: துணிச்சல் மிக்க நிர்வாகியை தமிழ்நாடு இழந்துவிட்டதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைப் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி இரங்கல் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 22ம் தேதி உடல் நலம் இன்றி சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு ஜெயலலிதா கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின்னர் நேற்று முன் தினம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு 11.30 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் செய்திகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். துணிச்சல் மிக்க சிறந்த அரசியல் நிர்வாகியை தமிழகம் இழந்துவிட்டது. அவரின் இழப்பு அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாதது என்று முஹம்மது ஷிப்லி கூறியுள்ளார்.