கத்தி படம் சுமூக தீர்வு காணப்பட்டு வெளியிடப்பட வேண்டும்: திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் வலியுறுத்தல்
சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள கத்தி திரைப்படத்துக்கு எதிர்ப்புகள் குறித்து சுமூகமாகப் பேசித் தீர்வு காணப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என்று திரைப்படத் தயாரிப்பாளரும் திமுக எம்.எல்.ஏவுமான ஜெ. அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜபக்சே குடும்பத்தினர் பங்குதாரராக இருக்கும் லைக்கா நிறுவனம் கத்தி உட்பட தமிழ்த் திரைப்படத் தயாரிப்புகளை மேற்கொள்ளக் கூடாது என்று 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அதே நேரத்தில் லைக்கா நிறுவனமும் கத்தி திரைப்படக் குழுவும் சுமூகத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்று தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு திட்டவட்டமாக இதனை நிராகரித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பில் இருந்து லைக்கா நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
My support will be always there for the #Kaththi movie and Tamil Film Industry. #ISupporKaththi. I request don not enter politics in cinema.
— J Anbazhagan (@JAnbazhagan) October 21, 2014
இந்த நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான திமுகவைச் சேர்ந்த ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. நமது "தமிழ் ஒன் இந்தியாவுக்கு" அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஒரு திரைப்படத்தை எடுத்து வெளியிடுவது என்பது சாதாரண விஷயம் இல்லை. எத்தனையோ ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூட்டு உழைப்பில் உருவாவதுதான் ஒரு சினிமா.
இந்த சினிமாவை வெளியிடும் நேரத்தில் நிறுத்துவது என்பது சரியானது அல்ல. முன்பு தலைவா படத்துக்கும் இதுபோல் எதிர்ப்பு வந்தது. குறிப்பிட்ட தேதியில் படம் வெளிவராமல் 10 நாட்களுக்கு வெளிவந்தது. இதனால் தயாரிப்பாளருக்குத்தான் நட்டம்.
படம் ஒரு குறிப்பிட்ட தேதியில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்ப்புகள் எழுந்தால் அதை அரசாங்கமும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் உட்பட திரை உலகப் பெரியவர்களும் கலந்து பேசி சுமூகமான தீர்வை உருவாக்கி எந்த பிரச்சனையும் இல்லாம ஒரு படம் வெளியிடப்பட வேண்டும்.
படத்தை பார்ப்பதற்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் நாளை காத்திருக்கின்றனர். திரைத்துறையில் அரசியலை நுழைக்க வேண்டியதில்லை. இந்த நிலையில் படம் வெளியிடப்படுவது தாமதமானால் தயாரிப்பாளருக்குத்தான் மிகப் பெரிய நட்டம் ஏற்படும். இதனால் ஒரு திரைப்பட தயாரிப்பாளராக கத்தி திரைப்படம் சுமூகமாக வெளியிடப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெ. அன்பழகன் கூறியுள்ளார்.