பிரதமரை சந்திக்க ஆசைப்பட்ட தீபா... போயஸ் கார்டன் கலவரத்தின் பரபர பின்னணி
பிரதமர் மோடியை நேரில் சந்திக்க ஆசைப்பட்ட ஜெ.தீபா அதை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் போயஸ் கார்டன் சென்றுள்ளார் என்றும் அங்கு நிகழ்ந்த சிறு கலவரத்தை அதற்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது
சென்னை: இன்று காலை 9 மணிக்கு போயஸ்கார்டன் சென்ற தீபா, ஜெயயலலிதா வீட்டுக்குள் செல்ல முயன்றார். அப்போது அவருக்கு அங்கிருந்த தனியார் பாதுகாவலர்கள் அனுமதி மறுத்து வெளியே விரட்டியுள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த ஜெ.தீபா வேதா இல்ல வாசலில் தர்ணாவில் ஈடுபட்டார்.
இதனை அறிந்த பத்திரிக்கையாளர்கள் வேகமாக போயஸ் கார்டனில் குவிந்தனர். அவர்களை ஜெயலலிதா வீடு அருகே கூட அனுமதிக்காத போலீசார், ரஜினிகாந்த் வீடு செல்லும் வழியில் , தெருமுனையில் போலீஸ் பூத் உள்ள இடத்திலேயே மடக்கி நிறுத்தினர்.
இதனால் பத்திரிகையாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. இதனிடையே தீபாவோடு சென்ற ஆங்கில சேனல் ஒன்றின் கேமிராமேன், செய்தியாளர் மீது தினகரன் ஏற்பாடு செய்துள்ள தனியார் செக்கியூரிட்டி நபர்கள் கடுமையாக தாக்குதல் நடைதினர்.
அதில், கேமிராவும் மைக் உள்ளிட்ட கருவிகளும் உடைக்கப்பட்டன. அதே போல் கேமிராமேனுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. செய்தியாளருக்கு மண்டை உடைந்தது. இதனால் ஜெயலலிதா வீட்டுமுன்பு போலீசார் முன்னிலையில் அவர்களைக் கண்டித்தும் தாக்குதலில் ஈடுபட்ட செக்கியூரிட்டி குண்டர்களைக் கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருபக்கம் தீபா, இன்னொரு பக்கம் செய்தியாளர்கள் போராட்டம், பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு என்று போயஸ் கார்டன் பகுதியே பதற்றமாக உள்ளது.
தீபா போட்ட திட்டம்
இந்த நிலையில் ஜெ. தீபா பிரதமர் மோடியை சந்திக்க போட்ட திட்டம்தான் அவர் போயஸ் கார்டன் வந்ததும் அங்கு நடந்த அசம்பாவிதங்களும் திட்டமிடப்பட்ட ஒன்று என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
துரோகி தினகரன்
நேற்று தீபா வெளியிட்ட அறிக்கையில், " தினகரன் மாதிரி ஆட்கள் அதிமுக-வை சொந்தம் கொண்டாடுவது ஏற்கமுடியாது. கட்சியை வழிநடத்திய ஜெயலலிதா தினகரனை துரோகி என்று இனம் கண்டு பகிரங்கமாக கண்டித்து அடிப்படை உறுப்பினராகக்கூட இருக்க தகுதியற்ற நபராக நீக்கிவைத்தார்.
தலைமறைவு வாழ்வு வாழந்த டிடிவி
அன்று முதல் வெளித்தெரியா வாழ்வு கண்ட நபரே இந்த தினகரன். துரோக கும்பலால் தான் ஜெயலலிதாவுக்கு நேர்ந்த மரணத்தின் மர்மம் என்பது ஒட்டு மொத்த தமிழக மக்களால் முன் வைக்கப்படும் பகிரங்க குற்றச்சாட்டாகும். ஆட்சியையும் கைப்பற்ற நினைப்பது பொதுமக்களுக்கும், தொண்டர்களும் பொறுத்துக்கொள்ள முடியாத கோபத்தையும், ஆத்திரத்தையும் மூட்டியுள்ளது.
நான் மட்டுமே ஜெ. வாரிசு
ஜெயலலிதாவின் உண்மை வாரிசான என்னால் தான் இக்கழகம் கட்டிக்காக்கப்படும். எனது அத்தை எனக்கு ஊட்டி வளர்த்திட்ட தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டு இக்கழகத்தை மீட்டு கட்டிகாப்பதே எனது லட்சியம். லட்சியம் நிறைவேரும் அந்நாளில் துரோக கும்பலின் கொட்டம் அடக்கப்பட்டிருக்கும் வீழ்த்தப்பட்டிருக்கும் என்பதனை எச்சரிக்கையுடன் தெரிவிக்கிறேன்." என்று கொந்தளித்திருந்தார்.
அறிக்கையின் பின்னே ஒளிந்துள்ள அரசியல்வாதி
தேர்ந்த அரசியல்வாதி எழுதியது போல எழுதப்பட்டுள்ள இந்த அறிக்கைக்கு பின்னே யார் இருக்கிறார்கள் என்று சந்தேகம் எழுப்பியுள்ள தினகரன் ஆதரவாளர்கள், அவர் யார் என்று உங்களுக்குத் தெரியும் அவர் விரைவில் வெளி உலகுக்கு தெரியப்படுத்தப்படுவார் என்றும் கூறியுள்ளனர்.
அறிக்கை முன்னே கலவரம் பின்னே
நேரடியாகக் களத்துக்கு வந்துவிட்ட ஜெ.தீபா தனக்கு உரிய அங்கீகாரம் சரியான அளவில் இன்னும் கிடைக்கவில்லை என்று கவலையில் இருப்பதாகவும் அதனால்தான் 'போயஸ் கார்டன் ஆப்ரேஷனை' கையில் எடுத்தார் என்றும் கூறப்படுகிறது.
பத்திரிக்கையாளர்களை மாட்டிவிட்ட தீபா
தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்பில் ஜெ.வீடு இருக்கிறது என்பதை நன்கு அறிந்து வைத்திருந்த ஜெ.தீபா, அதனை டிவி செய்தியாளர்களிடம் மறைத்துவிட்டு உள்ளே அழைத்துச் சென்று அடிவாங்க விட்டுள்ளார். அப்பாவி பத்திரிக்கையாளர்கள் தீபா நோக்கம் தெரியாமல் மாட்டிக் கொண்டு காயம் அடைந்துள்ளனர்.
ஓபிஎஸ், இபிஎஸ் போல மோடி சந்திப்பு
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் போலவும், இந்நாள் முதல்வர் இபிஎஸ் போலவும் அடிக்கடி பிரதமர் மோடியைச் சந்திக்க தீபா திட்டமிட்டுள்ளார். அதனால் இப்படி ஒரு சிறு கலாட்டா செய்து அதன்மூலம் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
தீபா எதிர்ப்பார்ப்பு என்ன?
அதன் மூலம் தனது பேரவையும் அதிமுக அணிதான் என்றும் தீபா நிரூபிக்க முயல்கிறார் என்றும் , இரட்டை இலை சின்னம், பொதுச் செயலாளர் பதவி, ஆட்சி அதிகாரம் என்று எல்லாவற்றிலும் தன்னையும் சேர்த்து பாஜக தலைமையும் பிரதமர் மோடியும் முடிவெடுக்க வேண்டும் என்பதே அவரின் இலக்கு என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.