இங்க பாருங்க டிவிஸ்ட்டு.. தீபா எங்கள் வீட்டு பிள்ளை.. அதிமுகவில் இணைவார்: நடராஜன் பேட்டி
தீபா எங்களுடன் வந்து இணைவார் என சசிகலாவின் கணவர் நடராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியை கைப்பற்ற முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தஞ்சை: தீபா எங்களுடன் வந்து இணைவார் என சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்துள்ளார். மேலும் தீபாவும் தீபக்கும் தங்கள் வீட்டு பிள்ளைகள் என்றும் அவர் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக அவரது தோழி சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து அவர்களது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் அதிமுக சென்றது.
இந்நிலையில் பொங்கல் விழா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன் அதிமுகவின் தொடக்க காலம் முதலே கட்சியை பாதுகாத்ததில் தங்களுக்கு அதிக பங்கு இருக்கிறது என்றும் நாங்கள் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல என கூறியிருந்தார். திவாகரனின் இந்த பேச்சு அதிமுக மூத்த தலைவர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் சசிகலாவின் கணவர் நடராஜன் நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம் என்று பேசினார். சசிகலா குடும்பத்தினரின் இந்த சர்ச்சைப் பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தஞ்சையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடராஜன். தீபா தங்களுடன் வந்து இணைவார் என்று கூறியுள்ளார். தீபாவும் தீபக்கும எங்கள் வீட்டு குழந்தைகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாஜக தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா அரசியலுக்கு வருவது உறுதியாகியுள்ள நிலையில் நடராஜனின் இந்த பேச்சு தீபாக்கு உள்ள ஆதராவல் ஏற்பட்ட அச்சத்தின் வெளிப்பாடே என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.