போராட்டத்தை கைவிட்டு ஜல்லிக்கட்டு களத்திற்கு வாருங்கள் - ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை
போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்று விட்டது. எனவே மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு ஜல்லிக்கட்டுக்கு களத்திற்கு வாருங்கள் என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை: ஜல்லிக்கட்டு வேண்டும் என்று ஜல்லிக்கட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், காங்கேயம் காளை அறக்கட்டளை தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, வழக்கறிஞர் அம்பலத்தரசு, 'ஹிப் ஹாப்' தமிழா ஆதி, வீர விளையாட்டு மீட்புக் கழகத் தலைவர் ராஜேஷ் ஆகியோர் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசினர்.
செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் அம்பலத்தரசு, கடந்த 2006ஆம் ஆண்டில் இருந்து ஜல்லிக்கட்டுக்காக போராடி வருவதாக கூறியுள்ளார். மத்திய அரசுதான் அவசரச் சட்டத்தை கொண்டுவந்திருக்க வேண்டும் என்று அம்பலத்தரசு கூறியுள்ளார். பொதுவாக அவசரச் சட்டம் கொண்டுவர தற்போதைய குடியரசு தலைவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய அவசரச் சட்டத்துக்கு பீட்டாவால் தடை பெற முடியாது எனவும் அம்பலத்தரசு கூறியுள்ளார். போராட்டத்தை முடித்துக்கொள்வது குறித்து மாணவர்களே முடிவு செய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதே போல ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் வெற்றி பெற்றுள்ளது என்று வீர விளையாட்டு மீட்புக் கழகத் தலைவர் ராஜேஷ் கூறியுள்ளார்.
இந்த வெற்றி மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று கூறினார். முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அளித்துள்ள விளக்கம் திருப்தியளிக்கிறது.
எனவே மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடராமல் ஜல்லிக்கட்டு களத்திற்கு வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ராஜசேகரன், அவரச சட்டவரைவு அலங்காநல்லூர் மக்களுக்கு சென்றடையவில்லை. சரியான விளக்கம் அளிக்கப்படாததால் மக்கள் போராடி வருகிறார்கள் என்றார். பாதுகாப்பாக தமிழகம் முழுவதும் ஜல்லிகட்டு நடைபெறும் என்றும் ராஜசேகரன் தெரிவித்தார்.