90% வெற்றி , போராட்டத்தை ஒத்திவைப்போம்... இளைஞர்களுக்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை
சென்னை: சென்னை:ஜல்லிக்கட்டு நோக்கம் 90 சதவீதம் நிறைவேறி விட்டது. மாணவர்களின் போராட்டம் தன்னிச்சையானது. யாரும் தலைவர்கள் கிடையாது எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்று உத்தரவிட முடியாது. தற்சமயம் ஒத்திவையுங்கள் என்று கோரிக்கை வைக்கிறோம் என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்காக ஆரம்பத்திலிருந்து குரல் கொடுத்து வரும் தமிழக ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் டாக்டர் பி.ராஜசேகரன், சேனாபதி காங்கேயம் கால்நடை ஆய்வுக் கழக நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சேனாபதி, திருச்சி வீர விளையாட்டுப் பேரவை செயலாளர் ராஜேஷ், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஆகியோர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.
ஜல்லிக்கட்டு போராட்டம்
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று கடந்த ஒருவாரகாலமாக இரவு பகலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு அவசர சட்டம் நிறைவேற்றியுள்ளது. அதே அவசரத்தோடு இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்தது. ஆனால் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகிய யாரையும் அலங்காநல்லூருக்குள் நுழையவிடவில்லை. போராட்டம் முன்னை விட வேகமடைந்துள்ளது.
நிரந்தரமாகும்
இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆர்வலர்கள் அவசர சட்டம் திருப்தியளிக்கும் வகையில் உள்ளதாக கூறியுள்ளனர்.தமிழக ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் டாக்டர் பி.ராஜசேகரன், அரசு இயற்றியுள்ள அவசர சட்டம் விரைவில் நிரந்தரமாகும் என்றார்.
90 சதவிகிதம் வெற்றி
அதே போல செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திகேய சிவசேனாபதி,வெளிநாட்டு நிதி மூலம் தமிழக கால்நடைகளை அழிக்க பீட்டா அமைப்பு முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளார். ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று மாணவர்கள் நடத்திய போராட்டம் 90 சதவிகிதம் வெற்றி பெற்று விட்டது. போராட்டத்தை இனியும் தொடர்வது அனைவருக்குமே சிரமம்.
பீட்டா மீது புகார்
உள்துறை அமைச்சரை சந்தித்து பீட்டா பற்றி கூறியுள்ளோம். தமிழக கால்நடைகளை பீட்டா அழிக்க முயற்சி செய்வதாகவும் தெரிவித்துள்ளோம்.
மத்திய அரசிடம் விரைவில் பீட்டா மீது புகார் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யாரும் தலைவர்கள் இல்லை
ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்துக்கு யாரும் தலைமை கிடையாது என்றும் சிவசேனாபதி கூறியுள்ளார். போராட்டத்தை கைவிட கூறி உத்தரவிட முடியாது. எங்களுக்கு எவ்வித அழுத்தமும் இல்லை. மார்ச் 31ஆம் தேதிவரை போராட்டத்தை ஒத்தி வைக்கலாம். பிரதமருக்கும், முதல்வருக்கும் இரண்டு மாதங்கள் நேரம் கொடுக்கலாம் என்றும் கார்த்திகேய சிவசேனாபதி கூறியுள்ளார். இந்திய இறையாண்மைக்கு உட்பட்டுதான் போராட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.