ஜல்லிக்கட்டு தடையை நீக்கும் அவசர சட்டம் தேவை- மோடியிடம் வலியுறுத்திய ஓபிஎஸ்
சென்னை : கடந்த 2006ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை தடை செய்து பல்வேறு நீதிமன்றங்கள் உத்தரவிட்டு வந்துள்ளன. எனினும், இடைக்கால ஆணைகளின்படி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இறுதியாக 7.5.2014 அன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு ஒட்டுமொத்த தடை விதித்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்திடும் வகையில், 7.1.2016 அன்று மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தன. இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள், மாணவ - மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் போராட்டம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்காக டெல்லி சென்ற முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலையில் பிரதமர் இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது ஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் போராட்டங்கள் பற்றி விளக்கி கூறினார்.
அலங்காநல்லூர் போராட்டம்
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூரில் ஜனவரி 16ஆம் தேதியன்று திரண்ட ஏராளமான இளைஞர்கள் அங்கு அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டும் பனி என்று கூட பாராமல், விடிய விடிய அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர்களை, போலீசார் மறுநாள் காலையில் கைது செய்தனர்.
4 நாட்களாக தீவிர போராட்டம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலங்காநல்லூர் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அங்கு திரண்ட இளைஞர்கள் பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 4வது நாளாக அலங்காநல்லூரில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மெரீனாவில் பற்றிய புரட்சி
அதனைத்தொடர்ந்து, அலங்காநல்லூரில் இளைஞர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சென்னை மெரினாவில் அணி அணியாக திரண்ட இளைஞர்கள் அங்கு அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி என தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக திரண்ட இளைஞர்கள் தொடர்ந்து, மூன்றாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீடு வாசல் செல்ல மாட்டோம்
வாடிவாசல் திறக்கவில்லை எனில் வீடு வாசல் எங்களுக்கு கிடையாது. பீட்டாவை தடை செய்ய வேண்டும். காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்ற இளைஞர்களின் எழுச்சி குரல் விண்ணை எட்டியுள்ளது. காவல்துறையினரும் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்மதிக்காக இளைஞர்கள்
போராட்டத்தை விலக்கிக் கொள்ளுமாறு முதல்வர் வெளியிட்ட அறிக்கை இளைஞர்களுக்கு மன நிறைவை தரவில்லை. பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை விலக்கிக்கொள்ள மாணவர்கள் சம்மதிக்கைவில்லை. ஜல்லிக்கட்டு நடத்தினால் மட்டுமே போராட்டத்தை விலக்கிக் கொள்வோம் என்பது இளைஞர்களின் கருத்து.
டெல்லி பயணம்
பிரதமர் மோடியை சந்தித்து, ஜல்லிக்கட்டு பிரச்னை குறித்து விவாதிக்க முடிவு செய்த முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் புதன்கிழமையன்று இரவே டெல்லி புறப்பட்டு சென்றார். தலைமை செயலாளர் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் அவருடன் புறப்பட்டு சென்றுள்ளனர். காலை 10.30 மணியளவில் பிரதமர் மோடியை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவருக்கு பொன்னாடை போர்த்திய முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கோரிக்கை மனுவை அளித்தார்.
வரலாற்று முக்கியத்துவம்
இந்த சந்திப்பின் போது ஜல்லிக்கட்டின் அவசியம், மாணவர்களின் எழுச்சி போராட்டம், எடுக்கப்பட வேண்டிய நிலைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. அவசர சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் எனவும், மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் எனவும், காட்சிப்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து காளைகளை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். முதல்வரின் கோரிக்கை ஏற்பட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டால் இது தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அவசர சட்டம்
தமிழ்நாட்டின் பண்டைய பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றின் பிரதிபலிப்பே ஜல்லிக்கட்டு என்பது ஒவ்வொரு தமிழனின் எண்ணமாகும். தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள தமிழர்களின் உணர்வுகளோடு ஒன்றிணைந்தது ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.