கட்டிப்பிடிக்க ஆளில்லை.. நடிகரிடம் சொன்ன ஜல்லிக்கட்டு 'போராளி' ஜூலி.. பிக்பாசில் வெடித்த சர்ச்சை!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் எபிசோடில் சர்ச்சைக்குரிய பெரும் பரபரப்பு நிகழ்வு அரங்கேறியுள்ளது.
பல மொழி டிவி சேனல்களில் வெற்றி பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சி, இப்போது தமிழுக்கு அறிமுகம் ஆகியுள்ளது. ஒவ்வொரு மொழியிலும் முன்னணி நடிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள். தமிழில் நடிகர் கமல்ஹாசன், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
நிகழ்ச்சியினர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ள ஒரு பெரிய வீட்டுக்குள் 15 போட்டியாளர்கள் 100 நாட்களுக்கு வசிக்க வேண்டும் என்பது விதிமுறை.
விதிமுறைகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் 15 போட்டியாளர்களுக்கும் பல்வேறு நிபந்தனைகள், விதிமுறைகள் உள்ளன. போட்டியில் வெற்றிபெற அவற்றை பின்பற்ற வேண்டும்.
சிசிடிவி கண்காணிப்பு
போட்டியாளர்கள் வீட்டுக்குள் செல்போன் பேச முடியாது, இணையதள சேவைகளை பயன்படுத்த முடியாது. சாப்பாடு உள்ளிட்டவற்றை சமைத்து சாப்பிக்கொள்ளலாம். போட்டியாளர்களை மொத்தம் 30 சிசிடிவி காமிராக்கள் கண்காணித்தபடியே இருக்கும்.
ஒரு மணி நேரம்
தினமும் இரவு 9 மணி முதல் 10 மணிவரை விஜய் டிவி இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. அன்றைய தினம் நடந்தவற்றில் முக்கியமானவற்றை தொகுத்து அந்த நேரத்தில் காண்பிக்கிறார்கள்.
தலைவர்
நேற்றைய முதல் நாள் எபிசோடில், 15 பேருக்குமான ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வுகள் காட்டப்பட்டன. பெரும்பாலான பங்கேற்பாளர்கள் கவிஞர் சினேகனை தங்கள் தலைவராக தேர்ந்தெடுத்தனர். அவரும் சிறு தயக்கத்திற்கு பிறகு அதை ஏற்றுக்கொண்டார்.
சினேகன் பேச்சு
இதன்பிறகு பங்கேற்பாளர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டவற்றில் முக்கியமானதை நிகழ்ச்சியில் காட்டினார்கள். ராம் திரைப்படத்தில் தான் எழுதிய ஒரு பாடல் போலீஸ் உதவி கமிஷனர் ஒருவருக்கு அவரது தாய் மீது பாசம் ஏற்பட காரணமாக இருந்த சம்பவத்தை சினேகன் பகிர்ந்த காட்சிகள் காட்டப்பட்டன.
ஷாங்கிங் சம்பவம்
ஆனால், மற்றொரு ஷாங்கிங் நிகழ்வு அரங்கேறியது. ரகசிய கேமராவில் பதிவான அந்த காட்சி ரசிகர்களை தூக்கிவாரிப்போட்டது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண் ஜூலியானாவின் (ஜூலி) பேச்சுதான் அது.
ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, "சின்னம்மா, சின்னம்மா, ஓபிஎஸ்ச எங்கம்மா.." என்று கோஷமிட்டதன் மூலம் மொத்த தமிழகத்திற்கும் பரிட்சையமானவர் இவர். இதனால்தான் ஜூலிக்கு பிக்பாசில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. தலையில் சிவப்பு துப்பட்டாவை கட்டியபடி ஒரு போராளிபோலத்தான் பிக்பாஸ் செட்டுக்குள் நுழைந்தார் ஜூலி. தனது பெற்றோரிடம் ஆசி பெற்றுவிட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நடிகரிடம் பேச்சு
ஆனால், அந்த ஜூலி நேற்றைய எபிசோடில் காட்டப்பட்ட காட்சியில் செய்த காரியம் தெரியுமா? சக பங்கேற்பாளரான இளம் நடிகர் ஸ்ரீ அந்தப்பக்கம் வந்தபோது அவரை அமர வைத்து பேசினார் ஜூலி. செட்டுக்குள் வந்தபோது ஒவ்வொரு பங்கேற்பாளர்களும் கட்டிப்பிடித்து வரவேற்றுக்கொண்டதை அவர் நினைவுபடுத்தி பேசினார்.
|
பகீர் பேச்சு
"ஒவ்வொருத்தரும், கட்டிப்புடிக்குறாங்க, எனக்கு யாருமே இல்லை என் நிலைமய கொஞ்சம் யோசிச்சுப்பாரு..." என்று பகீர் ரக பேச்சு பேசினார் ஜூலி. மேலும், என்னை விட்டு போய்விடாதே என்று அன்புக்கட்டளையிட்டார். அந்த நேரம் அந்தப்பக்கம் சக போட்டியாளர் ஒருவர் நடந்து சென்றதால் பேச்சு தடைபட்டது.
|
நெட்டிசன்கள் வறுவல்
இந்த காட்சியை டிவியில் பார்த்த நெட்டிசன்கள் கடும் கோபமடைந்துள்ளனர். ஜூலி பேச்சும், உடல்மொழியும், நட்புரீதியிலான பேச்சுமாதிரி தெரியவில்லை என அவர்கள் ஆதங்கம் வெளிப்படுத்தி வருகிறார்கள். எனக்கு நண்பர்கள் இல்லை என்று கூற வந்ததை இப்படி ஜூலி கூறியிருக்கலாம், அல்லது பரபரப்புக்காக இப்படி பேச வைத்திருக்கலாம் என்ற கருத்துக்களையும் நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.