ஜல்லிக்கட்டு, நெடுவாசல், கதிராமங்கலம், டாஸ்மாக், போராட்டங்கள்.. பேஷனுக்காக செய்கிறார்களா மக்கள்?
போராட்டம் நடத்துவது பேஷனாகி விட்டது என்று முதல்வர் பழனிச்சாமி சொல்லி இருக்கிறார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
சென்னை: ஜல்லிக்கட்டு, நெடுவாசல், கதிராமங்கலம், டாஸ்மாக், மக்கள் பொழுது போகாமல் நாள் கணக்கில் போராட்டம் நடத்தி அதை பேஷனாக மாற்றிவிட்டார்கள். அப்படித்தான் இருக்கிறது நமது முதல்வர் சொல்லும் பேஷன் கூற்று.
தமிழகத்தில் நடக்கும் போராட்டத்திற்கு எப்போதுமே ஒரு மதிப்பு மரியாதை இந்திய அளவில் உண்டு. அதற்கு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து கடைசியாக உலகை திரும்பி பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டம் வரை சாட்சி உள்ளது.
இந்திய அளவில் உள்ள மற்ற மாநிலங்களும் நமது போராட்டங்களின் வழிமுறைகளை பின்பற்றி போராடும் அளவிற்கு சிறப்பான வீரியமான போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன. அவைகள் எல்லாம் தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு பேஷனாகிவிட்டது.
சும்மா பொழுது போக்க..
போராடும் மக்களுக்கு பொழுது போகாமல், வெட்டி நேரத்தை எப்படி வீணடிப்பது என்று ரூம் போட்டு யோசித்துத்துதான் டாஸ்மாக், நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் மக்கள். ஒரு நாள் வேலைக்குப் போனால்தான் அரை வயிற்று கஞ்சி குடிக்க முடியும் என்ற நிலையில் உள்ள மக்கள் நாள் கணக்கில் எதற்காக போராடுகிறார்கள் என்ற அடிப்படையைக் கூட யோசிக்காமல் பேசுகிறார் முதல்வர்.
ஜல்லிக்கட்டு..
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையைக் கூட முறையாக கொண்டாட விடாமல் தடுக்க முயற்சி செய்கிறது பீட்டா என்ற ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பு. அதனை எதிர்த்து மக்கள் போராடி குறைந்தபட்ச வெற்றியை பெற்றார்கள். இதில் முன் நின்று நடத்திய மாணவர்களுக்கு பேஷன் என்று சொல்லிக் கொள்ள ஏகப்பட்ட விஷயங்கள் அவர்கள் கண் முன் கொட்டிக்கிடக்கின்றன என்பது முதல்வருக்கு தெரியாது போல.
நெடுவாசல் போராட்டம்
நெடுவாசலில் மக்கள் இன்று 86வது நாளாக போராடி வருகிறார்கள். குழந்தைகள், பெண்கள் என அனைவரும் ஒன்று கூடி எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள். வெறும் நெடுவாசலை மட்டும் காக்க என்று நாம் நினைத்துக் கொண்டால் நம்முடைய அறியாமை என்றுதான் சொல்ல வேண்டும்.
கதிராமங்கலம்
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதோ 8 நாட்களாக கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. வணிகர்கள் நடத்தும் போராட்டத்திற்கு அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட அன்றாட கூலி வேலைக்கு செல்வோர் வரை ஒன்று சேர்ந்து நிற்கிறார்களே.. இவர்களுக்கு பொழுது போகாமல் போராட்டத்தில் பேஷனுக்காக கலந்து கொள்கிறார்கள் என்றால் இதற்கு என்ன அர்த்தம்? பதிலை முதல்வர்தான் சொல்ல வேண்டும்.
டாஸ்மாக்
டாஸ்மாக் என்பது அரசுக்கு வேண்டுமானால் வருவாய் பெருக்கமாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு வீட்டிற்கும் அது வருவாய் இழப்பு. அதோடு மட்டுமல்லாமல் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் ஆண்களின் அட்டூழியங்களுக்கு ஆளாகும் பெண்கள் பற்றி ஆளும் அரசுக்கு கவலையில்லையா? அவர்கள் ஓட்டு உங்களுக்கு தேவையில்லையா? ஏன் பெண்கள் மட்டும் ஒன்று சேர்ந்து டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கெல்லாம் சாதாரணமாக சிந்தித்தாலே பதில் கிடைத்துவிடும்.
எஸ்கேப் முதல்வர்
அரசுக்கு எதிராக போராட்டம் நடக்கிறது என்றால் பதில் சொல்ல வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. எஸ்கேப் ஆவதற்காக போராட்டங்களை இழிவு செய்துவதை முதல்வர் நிறுத்திக் கொள்வது நல்லது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.