ஜல்லிக்கட்டுக்கு வழியில்லை.. அடிமாடாய் போகும் “காளைகள்” – இறைச்சிக்காக விற்கப்படும் அவலம்
மதுரை: மதுரை சுற்றுவட்டார ஜல்லிக்கட்டு காளைகளை அடிமாட்டு விலைக்கு விற்கும் அவல நிலைக்கு மாடு வளர்ப்போர் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறாக விற்கப்படும் காளைகள் இறைச்சிக்காக பயன்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை சுற்றுவட்டார பகுதிகளான அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது ஜல்லிக்கட்டு. இதற்காக மாடுபிடி வீரர்களும், காளைகளும் போட்டி நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே தங்களை தயார்படுத்தி கொள்வார்கள். காளை வளர்ப்பவர்கள் அதற்கென தனிக்கவனம் செலுத்தி பராமரித்து வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த வீர விளையாட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு வீரர்களும், காளை வளர்ப்போரும் தடையை நீக்கி மீண்டும் விளையாட்டை தொடர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல கட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டன.
ஆனாலும் தடை நீக்கப்படாததால் இந்த ஆண்டு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்பட எங்குமே ஜல்லிக்கட்டுகள் நடத்த முடியவில்லை.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்காக பராமரித்து வந்த காளைகளை பராமரிக்க முடியாமல் மாடு வளர்ப்போர், காளைகளை விற்க முடிவு செய்து வாடிப்பட்டி வார சந்தைக்கு கொண்டு சென்று விற்கும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது. இந்த சந்தைக்கு கேரளா வியாபாரிகள் இறைச்சிக்காக மாடுகள் வாங்க வருவது வழக்கமான ஒன்றாகும்.
ஜல்லிக்கட்டு காளைகளும் இங்கு விற்கப்பட்டு வருவதால் இறைச்சிக்காக அந்த மாடுகளையும் வியாபாரிகள் வாங்கி செல்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பு ஒரு ஜல்லிக்கட்டு காளை ரூபாய் 50 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சம் வரை விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது காளைகளின் விலை அடிமாட்டு அளவுக்கே அதாவது, ரூபாய் 10 ஆயிரம், ரூபாய் 15 ஆயிரத்துக்கு விற்கப்படும் பரிதாபத்திற்கு மாடு வளர்ப்போர் தள்ளப்பட்டுள்ளனர்.