ஜல்லிக்கட்டு புரட்சி : சென்னை மெரினாவில் 5வதுநாளாக அலைகடலாக திரளும் மக்கள்- 250 இடங்களில் போராட்டம்!
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 5வது நாளாக சென்னை மெரீனாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் 250 இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 5வது நாளாக இன்று நடக்கும் போராட்டத்தில் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
சென்னையில் மட்டும் 250 இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறுகிறது. இன்று சனிக்கிழமை விடுமுறை என்பதால் பொதுமக்கள் இன்று அதிகமான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
|
பறக்கும் ரயில்களில் நிரம்பிய கருஞ்சட்டைகள்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்பதற்காக ரயில்கள் மூலம் பல பகுதிகளில் இருந்தும் சென்னையில் குவிகின்றனர். கடற்கரை வேளச்சேரி பறக்கும் ரயில் மூலம் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு அலை அலையாக படையெடுக்கின்றனர். கருப்பு சட்டை அணிந்த புரட்சியாளர்களால் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
250 இடங்களில் போராட்டம்
சென்னையில் மெரீனா கடற்கரை தொடங்கி அடையாறு, ஐடி நிறுவன வளாகங்கள், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெறுகிறது. வீடுகளில் அருகில் உள்ள பகுதிகளிலும் போராட்டம் நடைபெறுகிறது. மொத்தம் சென்னையில் மட்டும் 210 இடங்களில் போராட்டம் நடைபெறுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
திணரும் ராதாகிருஷ்ணன் சாலை
கடற்கரைக்கு செல்லும் மிக முக்கிய சாலையான ராதாகிருஷ்ணன் சாலையில் இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. டிஜிபி அலுவலகம் வரை வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சாரை சாரையாக மக்கள் நடந்தும் சென்று கொண்டுள்ளன. இந்த சாலை வழியாக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மணற்பரப்பெங்கும் மனித தலைகள்
காலை முதலே மணல் பரப்பே தெரியாத அளவுக்கு காமராஜர் சாலை மற்றும் மெரினா கடற்கரை மக்கள் தலைகளாக காட்சியளிக்கின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கைகளில் பதாகை ஏந்தியும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்டும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இன்றும் நாளையும் விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் பல லட்சங்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.