கொட்டும் பனியில் இரவிலும் தொடரும் போராட்டம்.. பெண்களின் ஆவேசத்தில் திணறும் சேலம்
சேலத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் நடத்தி வரும் போராட்டம் நள்ளிரவை தாண்டியும் நடைபெற்று வருகிறது.
சேலம்: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி சேலத்தில் இன்று காலை தொடங்கிய போராட்டம் இரவிலும் தொடர்ந்து வருகிறது. இந்த போராட்டத்தில் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் ஏராளான பெண்கள், மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு இந்தாண்டும் தடை நீடிக்கிறது. இந்த தடையை உடனடியாக நீக்க வலியுறுத்தி தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்தநிலையில் சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று காலை 8 மணி அளவில் திரண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தை தொடங்கினர். காலையில் தொடங்கிய இந்த போராட்டத்தில் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பட்டவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
தற்போது சுமார் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் அங்கேயே தங்கி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள் பீட்டாவிற்கு எதிராக தொடர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.