7000 போலீசார் குவிப்பு.. சென்னையில் இன்று இயல்பு நிலை திரும்பும் - கமிஷனர் ஜார்ஜ்
சென்னையில் இன்று இயல்பு நிலை திரும்பும் என சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை: மெரீனா போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி கலவரத்தை உண்டாக்கியதாக சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கூறியுள்ளார். தற்போது பாதுகாப்பு பணியில் 7000 போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் இன்று இயல்பு நிலை திரும்பும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கக் கோரி சென்னை மெரீனாவில் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பினரும் ஒரு வார காலமாக அமைதி வழியில் போராடி வந்தனர். இதனிடையே அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது.
ஆனால் நிரந்தர சட்டம் நிறைவேற்றும் வரை போராட்டத்தில் இருந்து விலக போவதில்லை என இளைஞர்கள் அறிவித்தனர். இதனால் பதற்றம் அதிகரித்துக்கொண்டே சென்றது. லட்சக்கணக்கானோர் திரண்டிருந்ததால் போலீசாரும் திகைத்தனர். அறவழியில் நடைபெற்ற போராட்டத்தில் சில சமூக விரோத சக்திகள் முறைமுகமாக தலையிட்ட கலவரத்தை ஏற்படுத்தினர். இதனால் மெரீனாவில் கலவரம் மூண்டது. இதன் எதிரொலியாக காவல்துறையினரும் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கூறுகையில், மெரீனாவில் போராட்டக்காரர்களிடம் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறி்ததும் ஜல்லிக்கட்டு சட்டம் குறித்தும் காவல் துறை சார்பில் பல முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால் மாணவர்களின் ஒரு தரப்பினர் அதை ஏற்காததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மாணவர்களின் போராட்டத்தில் சமூக விரோத சக்திகள் நுழைந்ததாக எங்களுக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது.
அதன்படி, மெரினாவில் கூடியுள்ளவர்களை கலையுமாறு பலமுறை எச்சரித்தோம். அதில் மொத்தமுள்ள 4,500 பேரில் ஒரு தரப்பு மட்டும் கடல் அருகே சென்று மீண்டும் போராட்டம் நடத்தினர். சமூக விரோத சக்திகளால் தூண்டப்பட்டு சென்னையில் 98 இடங்களில் போராட்டம் நடந்தது. சமூக விரோத சக்திகள் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
அந்த நபர்கள் மாணவர்களை தவறான வழியில் கொண்டு சென்றார்கள். வன்முறையில் ஈடுபட்டது மாணவர்கள் அல்ல. சமூக விரோதிகள் காவல் துறையினர் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இரவு ரோந்து பணியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகரில் 7,000 காவலர்களும், 1000 துணை ஆய்வாளர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது கலவரம் நடந்த பகுதி காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. சென்னையில் இன்று இயல்பு நிலை திரும்பும் என்று அவர் தெரிவித்தார்.