அவசர சட்டத்திற்கு பிறகும் ஆவேசம் குறையவில்லை.. மெரினாவில் இரவிலும் போராட்டம் தீவிரம்
சென்னை: அவசர சட்டத்திற்கு பிறகும் மெரினாவில் போராட்டம் நடத்தும் இளைஞர்களின் ஆவேசம் குறையவில்லை. வார இறுதி நாள் என்பதால் இன்று இரவு மெரினாவில் போராட்டக்காரர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது.
ஜல்லிக்கட்டு நடத்த கோரி சென்னை மெரினா பீச்சில் இன்று 5வது நாளாக போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் என பல லட்சம் பேர் குவிந்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடத்த தேவையான அவசர சட்டத்திற்கு இன்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையிலும், போராட்டத்தை கைவிட மாட்டோம் என மெரினா போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக, நிரந்தர சட்டம் வேண்டும் என்று கேட்டு கோஷமிட்டு வருகிறார்கள் இளைஞர்கள். இரவில் மெரினா நோக்கி இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள், வாகனங்களில் செல்வதால் சாந்தோம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இரவு 11.30 மணிக்கு கூட கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் போராட்டக்காரர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.