மெரீனாவில் இளைஞர்கள் புரட்சி: தாரை தப்பட்டை... பொய்க்கால் குதிரையாட்டம் களை கட்டுது
ஜல்லிக்கட்டுக்காக மெரீனா கடற்கரையில் 2 லட்சம் பேர்வரை திரண்டு நடத்தி வரும் புரட்சி வேள்வியால் திணருகிறது அரசு... பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்
சென்னை: அதிகாலையில் நடைபயிற்சி செல்பவர்களையும் மாலையில் சந்தித்து பிரியும் காதலர்களையும் மட்டுமே கண்டு வந்த மெரீனா கடற்கரை அலைகள் கடந்த சில தினங்களாக அனல் பறக்கும் முழக்கங்களை கேட்டு வருகிறது.
சென்னை: ஜல்லிக்கட்டு பிரச்சினை அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்திற்கு மட்டுமே உள்ள பிரச்சினையல்ல. இது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பாரம்பரியம்.
சோறு தண்ணியில்லாம இருப்போம், தன்மானத்தை, எங்களின் உணர்வை விட்டுத்தரமாட்டோம் என்பது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைய தலைமுறையினரில் குரலாக உள்ளது.
புரட்சி வேள்வி
சமூக வலைதளங்களில் புதைந்து போயிருந்த இளைய சமுதாயத்தினர்தான், இன்றைக்கு ஜல்லிக்கட்டுக்காக அதே சமூக வலைத்தளத்தின் மூலம் மிகப்பெரிய புரட்சி வேள்வியை நடத்தி வருகின்றனர்.
அலை அலையாய் கூட்டம்
கடற்கரை மணலில் சுடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அலை அலையாய் திரண்டு வந்து ஜல்லிக்கட்டுக்கான ஆதரவை தெரிவித்து வருகின்றனர். காணும் பொங்கலுக்கு கடற்கரைக்கு வராதவர்கள் கூட இன்றைக்கு கடற்கரையில் கொட்டும் பனியில் கையில் பதாகையுடன் காத்திருக்கின்றனர்.
எழுச்சி முழக்கம்
மாலை முதலே நேரம் செல்லச் செல்ல போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. தற்போதைய நிலையில், அங்கு கிட்டத்தட்ட 5 கிலோமீட்டர் தொலைவுக்கு, காமராஜர் சாலையின் இருபுறமும் முகாமிட்டுள்ள போராட்டக்காரர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்டு வருகின்றனர். ஒருபக்கம் களைப்பு தெரியாமல் இருக்க தப்பட்டை முழங்குகிறது. ஆட்டம், பாட்டம் என அமர்களப்படுகிறது.
விண்ணை எட்டும் செல்போன் வெளிச்சம்
செல்போன் வெளிச்சப் பூக்கள் விண்மீன்களாய் மாறி விண்ணை எட்டுகின்றன. இந்த வெளிச்சப்புள்ளிகள் எதையோ இந்த உலகத்திற்கு உணர்த்துகின்றன. தமிழன் இருக்கும் வரைக்கும் காற்றாய் இருப்பான் புறப்பட்டால் புயலென புறப்படுவான் என்பதை இந்த புரட்சியின் மூலம் புரிய வைத்து விட்டான்.
2 லட்சம் பேர்
இப்போதய நிலவரப்படி 2 லட்சம் பேர் திரண்டுள்ளதாக கூறுகிறது காவல்துறையின் புள்ளிவிபரம். அலைமோதும் மக்கள் கூட்டம் காரணமாக, சென்னை மெரீனா கடற்கரை அமைந்துள்ள காமராஜர் சாலையில் அனைத்து விதமான போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. கடற்கரை வழியாகச் செல்லும் அரசுப் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு வருவதாக, போக்குவரத்து காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
சல்யூட் போலீஸ்
லட்சக்கணக்கான கூட்டம், அவ்வப்போது சின்னச் சின்ன கோபப் பேச்சுக்கள் இருந்தாலும், சிலர் குறும்புத்தனமாய் வாட்டர்பாட்டில்களை தூக்கி எறிந்தாலும் பொறுமையாய் கையாண்டு, என்ன தம்பிகளா இப்படி பண்ணலாமா? அமைதியா போராடுங்க நாங்க காவலுக்கு இருக்கோம் என்று கூறி குடிக்க தண்ணீர் கொடுக்கும் காவல்துறைக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட் வைக்கலாம்தான்.
பின்வாங்கப் போவதில்லை
மோடிக்கு நமது பாரம்பரியம் தெரியாமல் போகலாம், ஆனால் முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு நன்றாக தெரியும். எனவே அவரது முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று கூறிவிட்டு மீண்டும் முழக்கமிடுகின்றனர். ஐநூறு பேருடன் தொடங்கிய போராட்டம் இன்றைக்கு லட்சங்களை தொட்டுள்ளது. மாணவர்கள் எழுச்சி முழக்கத்தைக் கேட்டு கடல் அலை கூட தனது சத்தத்தை நிறுத்திக்கொண்டது என்றுதான் கூற வேண்டும்.
வெல்லட்டும் இளைஞர்களின் ஜல்லிக்கட்டு புரட்சி.